நன்றி சொல்ல வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. கேமராவையே உற்று நோக்கினாரா பிரதமர் மோடி? உண்மை என்ன?
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் அவர் நன்று தெரிவிக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி கேமராவையே உற்று நோக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவு செய்யப்பட்ட ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றிபெற்றார்.
திரெளபதி முர்மு உள்பட இந்தியாவின் 15 ஜனாதிபதிகளும்.. 15 சுவாரசிய தகவல்களும்.. முழுவிபரம்
இன்று ராம்நாத் கோவிந்த் ஓய்வு
இதனை தொடர்ந்து நாளை நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஓய்வு பெறுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வுபெறும் நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் நேற்று அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
பிரதமர் மோடி வழங்கிய விருந்து
இந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்தையும் அளித்தார். இதில், ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், நாளை குடியரசுத் தலைவராக பதவியேற்க இருக்கும் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நன்றி சொன்ன ராம்நாத் கோவிந்த்
இந்த நிகழ்வின்போது விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் பலரும் எழுந்து நிற்க ராம்நாத் கோவிந்த் அவர்கள் முன்பாக கை எடுத்து கும்பிட்டு நன்றி கூறியபடி வந்தார். அப்போது முன்வரிசையில் அருகருகே நின்றுகொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கேமராவை பார்த்த பிரதமர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்றி சொன்னபோது அவர் பின்னால்
கேமராமேன்கள் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தனர். அவர்களையே
பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்தை கவனிக்கவில்லை. இதனால் சில வினாடிகள் அவர் அருகே நின்ற ராம்நாத்
கோவிந்த், பிரதமர் தன்னை பார்க்காததை கண்டு அடுத்த நபரிடம் நகர்ந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதுபோன்ற வீடியோ எதிர்க்கட்சி பிரமுகர்களால் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போதிலும் பாஜக பிரமுகர்கள் இதை மறுக்கிறார்கள். அவர்கள் வெளியிடும் முழுமையான வீடியோ காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ராம்நாத் கோவிந்த்துக்கு வணக்கம் செலுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. வணக்கம் கூறி முடித்து விட்டு பிரதமர் நரேந்திர மோடி கேமராவை நோக்கி திரும்பி பார்த்து இருக்கிறார். ஆனால் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து வணக்கம் செலுத்தியபடியே வந்து கொண்டு இருந்துள்ளார். எனவே ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் அவமரியாதை செய்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பது பாஜகவினர் வாதமாக இருந்து வருகிறது. ராம்நாத் கோவிந்த் பிரதமரின் பின் வரிசையில் அமர்ந்து இருந்தவர்களை நோக்கி வணக்கம் வைக்கும் போதுதான் பிரதமர் இவ்வாறு கேமராவை நோக்கியதாக பாஜகவினர் மேலும் தெரிவிக்கிறார்கள். நீங்களும் ஒருமுறை அந்த காட்சியை பாருங்களேன்.