சிஏஏ அமலானது ஒருபுறம் இருக்க.. இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
டெல்லி: ரம்ஜான் மாதம் தொடங்கி உள்ளதை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாமியர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் பிறை தென்படும் நாளை வைத்து ரமலான் நோன்பு ஆரம்பம் ஆகிறது. ரமலான் மாதத்தின் கடைசி நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

அதன்படி 2024ஆம் ஆண்டில் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. நேற்று பிறை தென்பட்ட நிலையில், ரம்ஜான் நோன்பு இன்று முதல் (மார்ச் 12) தொடங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இந்நிலையில், புனித ரமலான் மாதத்தில் நோன்பைத் தொடங்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரமலான் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள். இந்தப் புனிதமான மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. சிஏஏ சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. ஆனால் அதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து 4 ஆண்டுகள் கடந்து தற்போது சிஏஏ அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சிஏஏ சட்டம், இஸ்லாமியர்கள் உள்ளிட்டோருக்கு தீங்கு விளைவிக்கும் என பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. லோக்சபா தேர்தலையொட்டி சிஏஏ அமல்படுத்தப்பட்டுள்ளதால் இஸ்லாமியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது விவாதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications