சர்வதேச திருவிழா தான் பொங்கல்.. நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறி கடிதம் எழுதிய பிரதமர் மோடி
டெல்லி: பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

பொங்கல் பண்டிகை, சர்வதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தைத்திருநாள், அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்.'' என பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் கர்நாடகா, ஆந்திராவிலும் நாளை மகர சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
சூரியன், உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
‛‛எனதருமை நாட்டுமக்களே,
வணக்கம்!
தங்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும். குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது.
வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது. குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து. மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
பொங்கல் பண்டிகை, சர்வதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தைத்திருநாள், அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்.
- உங்கள், நரேந்திர மோடி'' என பிரதமர் மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications