"ஈரானுடன் இந்தியா துணை நிற்கும்"- அதிபர் ரைசி மரணத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!
டெல்லி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஈரான் அதிபர் ரைசி உள்ளிட்டோர் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபராக 2021-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தர் ரைசி. ஈரானில் தீவிர பழமைவாத கருத்துகளை பின்பற்றக் கூடியவராக கருதப்படுகிறவர் 63 வயதாகும் அதிபர் ரைசி. 2019-ம் ஆண்டு ஈரான் மதத்தலைவர் கொமேனியால் நீதித்துறை தலைவராக்கப்பட்ட போது சர்வதேசம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

2021-ம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக இருந்து வந்த ரைசி, சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். அண்மைக்காலமாக சீனாவுடன் மிக நெருக்கமான உறவை பின்பற்றியவர்.
இந்த நிலையில் ஈரான் அதிபர் ரைசி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர், வர்செகான் என்ற நகரின் அருகே தரையில் மோதி விபத்துக்குள்ளானது. ஈரான்- அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி, கோடாஃபரின் ஆகிய 2 அணைகள் திறப்பு விழா நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் பங்கேற்று விட்டு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்தது.

ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டது உலகை அதிர்ச்சி அடையச் செய்தது. சுமார் 15 மணிநேர தேடுதல்களுக்குப் பின்னர் ஆளில்லா டிரோன்கள் மூலம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ரைசி உள்ளிட்ட 8 பேரும் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துவிட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் அதிபர் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு உலக நாடுகளின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தமது சமூக வலைதளப் பக்கத்தில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் மரணமடடைந்த செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியை தந்துள்ளது. இந்தியா- ஈரான் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர். ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் இந்திய மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய துயரமான தருணத்தில் ஈரானுடன் இணைந்து இந்தியா நிற்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேபோல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications