இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம்.. சர்வ மத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் மோடி
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்வ மத பிரார்த்தனைகளுடன் திறந்து வைத்து இருக்கிறார்
டெல்லியில் செயற்கை நுண்ணறிவு கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய நாடாளுமன்றம் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இதனை பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக இன்று காலை 7.15 க்கு புதிய நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வருகை தந்தார்.

7.30 மணியளவில் ஹோம பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து கர்நாடகாவின் சிங்மங்களூரு சிருங்கேரி மடம் சார்பில் கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. அதன் பின்னர் தமிழில் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க 40 ஆதீனங்கள் டெல்லிக்கு சென்று இருக்கும் நிலையில் அவர்கள் மந்திரங்களை ஓதினர். அவர்களுக்கு பிரதமர் மரியாதை செய்தார்.
ஒரு மணி நேரம் இந்து மத வழக்கப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று சம்பிரதாயப்படி நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி மக்களவை சென்று செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். இந்த செங்கோல் நேற்று மதுரை ஆதீனத்தால் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திருஞான சம்பந்தரின் கோளறு பதிகம் உள்ளிட்ட பாடல்களும் இசைக்கப்பட்டன.
தமிழ்நாட்டிலிருந்து டெல்லி சென்ற ஆதீனங்களை கவுரவிக்கும் வகையில் நேற்று மாலை பிரதமர் மோடி இல்லத்தில் சிறப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செங்கோல் நிறுவப்பட்ட பிறகு இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம் உள்ளிட்ட பல மதங்களின் சார்பில் சுமார் 30 நிமிடங்கள் சர்வ மத பிரார்த்தனைகள் நடைபெற்றன. 2020 நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிலும் இதேபோல் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.
பிற்பகல் 12 மணியளவில் நாடாளுமன்ற தொடக்க நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்க இருக்கிறது. மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண சிங் இதில் உரையாற்றுகிறார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீன் தன்கரின் வாழ்த்து செய்திகள் வாசிக்கப்படுகின்றன. இந்த விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications