பிரதமர் மோடி உளவியல் ரீதியாக உடைந்து போயிருக்கிறார்.. ஆட்சியை நடத்த முடியவில்லை.. ராகுல் காந்தி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக உடைந்து போயுள்ளார்; அவரால் ஆட்சியை நடத்த முடியாமல் தடுமாறுகிறார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களை அச்சத்தில் வைத்து ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த மோடியால் தற்போது அப்படி செய்ய முடியாமல் இருக்கிறது; அதனால் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நீட், நெட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: நீட், நெட் தேர்வு முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி கனத்த மவுனமாக இருக்கிறார். ஏனெனில் பிரதமர் மோடி செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் முக்கியமான செயல் திட்டமே தற்போதைக்கு லோக்சபா சபாநாயகர் தேர்தலை நடத்துவதுதான். பிரதமர் மோடிக்கான முதன்மையான கவலை எல்லாம் ஆட்சியைத் தக்க வைப்பதும் சபாநாயகர் தேர்தலும்தான்.
பிரதமர் மோடி உளவியல் ரீதியாக மிகவும் உடைந்து போயிருக்கிறார். தற்போதைய நிலையில் ஆட்சியை நடத்துவதற்கு பிரதமர் மோடி போராடிக் கொண்டிருக்கிறார். மக்களிடையே அச்சமான சூழ்நிலையை உருவாக்கி அதன் மீது ஆட்சி நடத்துவதான் மோடியின் சித்தாந்தம். ஆனால் தற்போது மக்களிடம் அந்த அச்ச உணர்வு விலகிவிட்டது. மோடியின் இத்தகைய அச்சமூட்டும் போக்கு என்பது லோக்சபா தேர்தலில் தகர்த்து எறியப்பட்டுவிட்டது.
வாஜ்பாய், மன்மோகன்சிங் போன்றவர்களால் இத்தகைய சூழ்நிலைகளைத் தாக்குப் பிடிக்க முடியும். ஏனெனில் அவர்களுக்கு மனிதாபிமானம், மரியாதை, ஒருவித சமரசதன்மை என எல்லாமும் இருந்தது. ஆனால் மோடிக்கோ இவைகளின் மீது நம்பிக்கையே கிடையாது.

நரேந்திர மோடியைப் பார்த்து இந்த நாட்டில் இப்போது யாரும் அச்சப்படுவதே இல்லை. முன்னர் 56 இஞ்ச் மார்பு என நெஞ்சை நிமிர்த்தினார். இப்போது மோடியால் அப்படி எல்லாம் எத்தனை இஞ்ச் மார்பு என்ன சொல்ல முடியாது. அது 30-32 இஞ்ச் மார்பாக குறைந்து போயிருக்கும்.
மக்களிடம் மோடி விதைத்திருந்த அச்சம் விலகிவிட்டது. வாரணாசியில் மோடியின் வாகனம் மீது காலணிகள் வீசப்பட்டிருக்கின்றன. இதனை எத்தனை பேர் பார்த்தீர்கள் என தெரியவில்லை. தேர்தலுக்கு முன்னர் மோடியை ஒருவர் தாக்குவதற்கு நினைப்பதற்கே அச்சம் இருக்கும். ஆனால் இப்போது அத்தகைய அச்சம் இல்லை.

பாஜகவுக்குள்ளேயே ஏகப்பட்ட மோதல்கள். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடனும் மோதல் உருவாகி இருக்கிறது. ஆகையால்தான் சொல்கிறேன் "அச்சமூட்டி ஆட்சி செய்வது" என்கிற மோடியின் சித்தாந்தம் தேர்தலில் எதிர்க்கட்சிகளால் நிர்மூலமாக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. இப்போது வலிமையான எதிர்க்கட்சி உருவெடுத்திருக்கிறது. ஆகையால் சுவாரசியமான தருணங்களாக இருக்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications