ஒரு முறை நோ பால் சரி.. திரும்ப திரும்ப ஏன் நோ பால் வீசுகிறீர்கள்.. கலகலனு சிரித்தபடியே கேட்ட பிரதமர்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நோ பால் என்றும் ஒரு முறை போட்டால் பரவாயில்லை, திரும்ப திரும்ப நோ பால் போடுகிறீர்களே என பிரதமர் மோடி கிண்டல் செய்து நாடாளுமன்றத்தில் பேசினார்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தி வருகின்றன.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பிரதமர் அவையில் இல்லை. அதனால் ராகுல் காந்தி பேசாமல் அவரது கட்சியை சேர்ந்த வேறு ஒரு எம்பி கவுரவ் கோகாய் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் ராகுல் காந்தி பாயிண்ட் பாயிண்டாக கேள்விகளை எழுப்பினார்.
மணிப்பூருக்கு பிரதமர் போகாதது ஏன், மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டார்கள். பாரதமாதாவையே பாஜக அரசு படுகொலை செய்துவிட்டது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி கனிமொழி பேசினார். அவரும் மணிப்பூருக்கு பிரதமர் சென்று அங்கு அந்த மக்களுக்கு நம்பிக்கையை தர வேண்டும் என்றார். இந்த நிலையில் நேற்றைய தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய போது மணிப்பூர் விவகாரத்தை அரசியல் செய்து குடிமக்களுக்கு மத்திய அரசை தவறாக சித்தரிக்கிறார்கள் என்றார்.
மேலும் பிரதமர் மோடி நாளை பேசுவார். அது மிக சிறப்பான பதிலடியாக இருக்கும் என்றார். இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றத் தொடங்கினார். அவர் பேசுகையில் கடவுளுக்கு மிகவும் கருணை இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் பேசிவிடுகிறார்.
எதிர்க்கட்சிகளின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது கடவுளின் ஆசி என நான் கருதுகிறேன். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நான் கூறினேன், இது நமக்கெல்லாம் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு. இதன் முடிவுகளை அவர்கள் தேர்தல்களில் உணருவார்கள் என்றேன்.
அடுத்த என்ன ஆயிற்று 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அபார வெற்றி பெற்றோம். அந்த வகையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நமக்கு அதிர்ஷ்டம்தான். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் வெல்லும் என்பதை நீங்கள் முடிவு செய்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் வாய்ப்பை இழக்கின்றன. நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகளின் நோ பால், ஒரு முறை நோ பால் போட்டால் பரவாயில்லை, திரும்ப திரும்ப நோ பால் வீசுவது ஏன். நாங்கள் சதம் அடித்துவிட்டோம். 5 ஆண்டு அவகாசம் கொடுத்தும் எதிர்க்கட்சிகள் எந்த முன்னெடுப்பையும் செய்யாமல் நோ பால் வீசுகிறார்கள். அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் ஆசை.
கடந்த 3 நாட்களாக என்னை மிகவும் மோசமாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். விமர்சனம் செய்வதில் மிகக் கீழான நிலையை எதிர்க்கட்சிகள் அடைந்துள்ளனர். என்னை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போன்றதாகும். எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை நான் வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசி வருகிறார்.












Click it and Unblock the Notifications