பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் குஜராத் பயணம்! ரூ280 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். குஜராத்தின் ஏக்தா நகரில் இன்று ரூ.280 கோடிக்கும் மேலான மதிப்புடைய பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு ஆரம்ப் 6.0-இன் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே அவர் உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் குஜராத் மாநிலம் வதோதராவில் நாட்டின் முதலாவது தனியார் விமான உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். ஸ்பெயின் பிரதமரும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். டாடா நிறுவனம் இந்த விமான உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்றும் நாளையும் பிரதமர் மோடி மீண்டும் குஜராத் பயணம் மேற்கொள்கிறார். குஜராத் ஏக்நா நகரில் ரூ280 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துதல், அணுகலை மேம்படுத்துதல் மற்றும் இப்பகுதியில் நிலைத்தன்மை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தேசிய ஒற்றுமை தினத்தை (அக்டோபர் 31) முன்னிட்டு ஆரம்ப் 6.0-இன் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள் "தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரத்துக்கான திட்டம்" என்பதாகும். 99-வது பொது அடிப்படைப் படிப்பான ஆரம்ப் 6.0-ல் இந்தியாவின் 16 குடிமைப் பணிகள் மற்றும் பூடானின் 3 குடிமைப்பணிகளில் இருந்து 653 பயிற்சி அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
நாளை அக்டோபர் 31 அன்று, தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி , சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார். ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்கவைத்து, ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கிறார். இதில் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேச காவல்துறை, 4 மத்திய ஆயுத காவல்படைகள், தேசிய மாணவர் படை மற்றும் அணிவகுப்பு இசைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த 16 அணிவகுப்புக் குழுக்கள் இடம்பெறும்.












Click it and Unblock the Notifications