வேளாண் சட்டங்களைப் போல.. அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறும்- அடித்து பேசும் ராகுல் காந்தி
டெல்லி: அக்னிபாத் திட்டம் மூலம் நாட்டின் ராணுவ பலத்தை பலவீனமாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக 5 நாட்களில் 60 மணி நேரத்திற்கும் மேலாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. அதுமட்டுமல்லாமல் டெல்லி ஜந்தர் மந்தரில் சத்யாகிரஹ போராட்டத்திலும் ஈடுபட்டது.

”என்னை பாதிக்காது”
இதுகுறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கூறுகையில், அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படும் தொடர் விசாரணைகள் என்னை பாதிக்காது. காங்கிரஸ் தலைவர்களை அச்சம் கொள்ளவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாது என்பது என்னிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கும் தெரியும். தனக்காக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணையின் போது நான் தனியாக இல்லை. ஜனநாயகத்திற்கு ஆதரவாக போராடும் அனைவரும் என்னுடன் இருந்தனர் என்று தெரிவித்தார்.

வேலையில்லா திண்டாட்டம்
தொடர்ந்து இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டை 2 முதல் 3 தொழிலதிபர்கலின் கைகளில் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார். சீன ராணுவம் நமது எல்லையில் அமர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, உண்மையான தேசபக்தி என்பது ராணுவத்தை பலப்படுத்துவது தான். ஆனால் ராணுவத்தை பலவீனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது இதன் விளைவுகள் விரைவில் தெரியும் என்று தெரிவித்தார்.

பதவி, ஓய்வூதியம் பற்றி ராகுல்
மத்திய பாஜக அரசு சிறு குறு தொழில்களை நசுக்கிவிட்டது. நாட்டின் முதுகெலும்பாக இருந்த சிறுகுறு தொழில்களை நொறுக்கியதுதான் வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம். முந்தைய காலத்தில், ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்று பேசி வந்தவர்கள் இப்போது பதவியும் இல்லை, ஓய்வூதியமும் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டம்
முன்பே சொல்லியது போல் மத்திய பாஜக அரசு எப்படி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொண்டதோ, அதேபோல் அக்னிபாத் திட்டத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளும். நாட்டின் எதிர்காலத்தை காக்கும் வகையில் இளைஞர்களுடன் நாங்கள் இருக்கிறோம். இதனால் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications