ரேசன் கடைகளில் இலவச அரிசி திட்டம்.. 2022 டிசம்பர் வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா லாக்டவுன் காலத்தில் அமல்படுத்தப்பட்ட பிரதமர் மோடி கரீப் கல்யாண் யோஜனா அன்ன போஜனா திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை ரேசன்கடைகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. லாக்டவுனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு, நிவாரணம் வழங்குவதற்காக ரூ.3,280 கோடியில் சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது.
இதனடிப்படையில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க உதவித்தொகையுடன் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த திட்டம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.
ரேசன் கார்டுகளில் முகவரி மாற்ற வேண்டுமா?.... நாளைக்கு முகாம் நடக்குது... மிஸ் பண்ணாதீங்க
கரீப் கல்யாண் யோஜனா
பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்கெனவே தேசிய உணவுப் பாதுகாப்ப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுடன் இது கூடுதலாக வழங்கப்பட்டது.
கால நீட்டிப்பு
கொரோனா பாதிப்பு குறைந்தபிறகும் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் நீட்டிக்கப்படுமா என கடந்த வாரம் மத்திய அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய உணவுத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டேவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், இதுகுறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதெல்லாம் அரசின் பெரிய முடிவுகள். எனவே இதுகுறித்து அரசு முடிவு எடுக்கும் என்று கூறினார்.
மாநில அரசுகள் கோரிக்கை
கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இலவச ரேசன் வழங்கும் திட்ட காலக்கெடுவை மேலும் நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.இந்த இலவச ரேஷன் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தால் மத்திய அரசிற்கு 80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டது.
டிசம்பர் 2022 வரை நீட்டிப்பு
இந்த நிலையில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் காலத்தை மத்திய அரசு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்போது ஏழைகளுக்கு 2022 டிசம்பர் வரை இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.