எடியூரப்பா ராஜினாமா செய்தால் கர்நாடகா முதல்வரா? மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சொன்ன பதில் என்ன?
டெல்லி: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தால் புதிய முதல்வர் யார் என்பதை பாஜக மூத்த தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முடிவு செய்வார்கள் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகா முதல்வராக உள்ள 78 வயது எடியூரப்பாவுக்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் எடியூரப்பாவை மாற்றுவது என பாஜக டெல்லி மேலிடம் தீர்மானித்துள்ளது. இதனை எடியூரப்பா ஏற்க மறுத்து வருகிறார்.

எடியூரப்பாவுக்கு லிங்காயத் ஆதரவு
அத்துடன் எடியூரப்பா தாம் சார்ந்த லிங்காயத் சமூகத்தினர் மூலமும் பாஜக மேலிடத்துக்கு அழுத்தம் தந்து வருகிறார். லிங்காயத் மடாதிபதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் எடியூரப்பாவை மாற்றக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

புதிய முதல்வர் யார்?
இதனிடையே எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த முதல்வர் யார் என்கிற விவாதமும் களை கட்டி வருகிறது. இதில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

யாரும் பேசவில்லையே..
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், முதல்வர் பதவி தொடர்பாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஊடகங்கள்தான் இதுபற்றி தொடர்ந்து பேசுகின்றன. ஆகையால் இத்தகைய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.

மூத்த தலைவர்கள் முடிவெடுப்பர்
மேலும் பாஜகவில் தேசிய அளவிலான தலைமைதான் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர்கள் இருந்துள்ளனர். ராஜ்நாத்சிங் இருந்தார். அவருக்குப் பின்னர் நிதின் கட்காரி, அமித்ஷா தற்போது ஜே.பி. நட்டா தலைவராக இருக்கிறார். பாஜகவின் மூத்த தலைவர்களாக பிரதமர் மோடி, அமித்ஷா இருக்கின்றனர். அவர்கள்தான் முதல்வர் பதவி குறித்து முடிவு எடுப்பார்கள் என்றும் விளக்கம் தந்தார் பிரகலாத் ஜோஷி.












Click it and Unblock the Notifications