சீன விவகாரம்.. பிடிஐக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விட்ட பிரசார் பாரதி.. நடந்தது என்ன?
டெல்லி: எல்லையில் சீனாவின் அத்துமீறல் விவகாரத்தை முன்வைத்து நாட்டின் மிகப் பெரிய செய்தி ஏஜென்சியான பி.டி.ஐ (PTI)-க்கு மத்திய அரசின் செய்தி அமைப்பான பிரசார் பாரதி எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் தேசநலனுக்கு எதிரான செய்திகளை வெளியிடுகிறது என்பது பிரசார் பாரதியின் குற்றச்சாட்டு.
இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கும் நிறுவனம் பி.டி.ஐ. எனப்படும் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. இது 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1949 முதல் செயல்பட்டு வருகிறது. 100 பத்திரிகை நிறுவனங்கள் இணைந்து இந்த செய்தி நிறுவனத்தை நடத்துகிறது.

பிடிஐ நிர்வாகம்
பிடிஐயின் போர்டில் மொத்தம் 16 பேர் உறுப்பினர்கள். 4 பேர் ஊடகம் சாராத வெளியில் இருந்து இடம் பெற்ற இயக்குநர்கள். தற்போது பிடிஐ நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் பஞ்சாப் கேசரி பத்திரிகையில் சி.இ.ஓ. விஜய் குமார் சோப்ரா. இந்த சேர்மன் பதவி ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாற்றப்படும். அனைத்து ஊடகங்களும் ஒரு குறிப்பிட்ட சந்தா தொகையை பிடிஐக்கு வழங்குகின்றன.

பிரசார் பாரதி- பிடிஐ
இதில் மத்திய அரசின் பிரசார் பாரதியும் பெருமளவு பிடிஐ-ன் செய்திகளை வழங்குவதால் கணிசமான சந்தா தொகை செலுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக பிடிஐ செய்தி நிறுவனத்தை தங்களது பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது பிரசார் பாரதியை நிர்வகிக்கும் ஆளும் தரப்பின் விருப்பம். ஆனால் அதற்கு ஊடக நிறுவனங்கள் வளைந்து கொடுக்காமலே இருந்தன.

பிடிஐ பேட்டிகள்
இப்போது லடாக்கில் சீனா பிரச்சனையை முன்வைத்து பிடிஐ செய்தி நிறுவனத்துடன் பகிரங்கமாகவே பிரசார் பாரதி அமைப்பு மோதுகிறது. டெல்லியில் உள்ள சீனாவின் தூதர் சென் வெய்துங் பேட்டி ஒன்றை பிடிஐ வெளியிட்டது. அதேபோல் சீனாவில் உள்ள இந்திய தூதரின் பேட்டியையும் பிடிஐ வெளியிட்டது. இந்த இரண்டு பேட்டிகளும் சீனா தொடர்பான பிரதமரின் கருத்துகளுக்கு நேர் எதிராக இருக்கின்றன என்பது பிரசார் பாரதியின் குற்றச்சாட்டு.

எச்சரிக்கை நோட்டீஸ்
எல்லையில் ஊடுருவல் நிகழ்ந்திருக்கிறது; அதை உறுதிப்படுத்தும் வகையில் சீனாவுக்கான இந்தியாவின் தூதர் பேட்டி அமைந்திருந்தது. டெல்லியில் உள்ள சீனாவின் தூதர் பேட்டியோ, இந்தியாதான் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பதாக அமைந்தது. இத்தகைய செய்திகளை பிடிஐ வெளியிடுவது தேசநலனுக்கே எதிரானது ; இதனால் பிடிஐக்கான சந்தா செலுத்துவதை ஏன் நிறுத்தக் கூடாது என்று பிரசார் பாரதி ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரசார் பாரதியின் இந்த மிரட்டலை எதிர்கொள்வது தொடர்பாக பிடிஐ போர்டு ஆலோசனை நடத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications