5 மாநில தேர்தலில் தோல்வி? பயத்தில் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் கிளப்பிவிடுது.. பிரசாந்த் பூஷண் தாக்கு!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் எப்படியும் தோல்வி உறுதி என்பதாலயே அச்சப்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற பூதத்தை பாஜக கிளப்பிவிடுவதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 22-ந் தேதி வரை நடைபெறும்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் 5 அமர்வுகளாக நடைபெறும். இந்த அமர்வுகளில் பொது சிவில் சட்டம், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தீர்மானம், நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் பாரத் என மாற்றும் தீர்மானம் ஆகியவையும் கொண்டுவரப்படலாம் என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது. அண்மையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷண் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றுகிற ஒரு நாட்டுக்கு பொருந்தி வராது. நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் போது ஒரு மாநில அரசு திடீரென பெரும்பான்மைய இழக்க நேரிடும்; இன்னொரு கூட்டணி பெரும்பான்மை பெறலாம். அப்படியானால் தேர்தல் நடைபெறும் வரை ஜனாதிபதி ஆட்சியை எத்தனை மாநிலங்களில் அமல்படுத்த முடியும்?
நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இருந்து ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாறுவதற்கு எத்தனை அரசியல் சாசன திருத்தங்களை செய்ய வேண்டும் தெரியுமா? நமது நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமே கிடையாது.
மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவக் கூடும் என ஏற்கனவே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தோல்வி பயத்தால், 5 மாநில சட்டசபை தேர்தல்களை ஒத்திவைக்க அல்லது தள்ளிப் போடுவதற்கான ஒரு யுக்தியாக ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் பலூனை காற்றில் பறக்க விட்டு பார்க்கிறது பாஜக. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்ற ஒன்று. இவ்வாறு பிரசாந்த் பூஷண் கூறினார்.












Click it and Unblock the Notifications