"மிஷன் பீகார்!" முதலில் யாத்திரை அறிவிப்பு. இப்போது அடுத்தகட்ட பாய்ச்சல்! பிகே திட்டம் தான் என்ன
டெல்லி: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியைத் தொடங்குவார் என்று கூறப்படும் நிலையில், பீகார் அரசை அவர் மிகக் கடுமையாகச் சாடி உள்ளார்,
பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அவர் காங்கிரஸ் தலைமை உடன் கூட தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி இருந்தார்,
காங்கிரஸ் கட்சியிலும் கூ பிரசாந்த் கிஷோருக்கு அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்த போதிலும் கூட, அது நடைபெறவில்லை.

பிகே பிளான் என்ன
அதேநேரம் அவர் தெலங்கானாவில் கேசிஆர் கட்சி உடன் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் மேற்கொண்டார். மறுபுறம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிகே தங்கள் உடன் பணியாற்றுவதாகக் கூறி இருந்தார். இதற்கிடையே பிகே தனியாக அரசியல் கட்சி தொடங்குவார் என்று செய்திகள் உலா வர தொடங்கின. இந்தச் சூழலில் தான், அவர் பீகார் மாநிலத்தில் மாபெரும் யாத்திரையை அறிவித்தார்.

பீகார்
இது அவரது அரசியல் வருகைக்கான சமிக்ஞையாக இருக்கும் என்றோ பலரும் கருதினர். இருப்பினும், இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணமில்லை என்று பிகே திட்டவட்டமாக மறுத்தார். அதேநேரம் பீகார் அரசு குறித்தும் சில கடுமையான கருத்துகளை அவர் முன் வைத்து இருந்தார், கடந்த 15 ஆண்டுகளில் பீகார் அரசியலில் முன்னேற்ற பணிகள் பெரியளவில் செய்யவில்லை என்றும் சாடியிருந்தார். இதனிடையே பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்,

நிதிஷ்குமார் விளக்கம்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், "பீகாரில் நாங்கள் நல்லது செய்தோமா இல்லையா என்பது மக்களுக்குத் தெரியும். யாரோ ஒருவர் எதையோ சொல்கிறார் என்பதற்காக அதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. உண்மை தான் முக்கியம். எங்கள் பணிகள் மக்களுக்குத் தெரியும். எனது ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில், உண்மை என்னவென்று மக்களுக்குத் தெரியும்" என்றார்.

பிகே பதிலடி
இந்நிலையில், நிதிஷ்குமார் கருத்துக்கு பிகே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நிதிஷ் குமார் சொல்வது சரிதான். உண்மை முக்கியமானது. உண்மை என்னவென்றால், கடந்த 30 ஆண்டுக்கால லாலு- நிதிஷ் ஆட்சிக்குப் பிறகு, பீகார் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளது, கடந்த 15 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தில் எதுவும் சரியாக நடக்கவில்லை.

இது போதாது
வளர்ச்சியின் பெரும்பாலான குறியீடுகளில் பீகார் இன்னும் கீழ்மட்டத்தில் உள்ளது. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மாநிலத்தில் என்ன மாதிரியான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதோ அதை வைத்துக் கொண்டு முன்னேறிய மாநிலங்கள் என்ற பட்டியலில் பீகார் வர முடியாது. சாலைகள், பாலங்கள் மற்றும் சுகாதார பணிகளில் நிதிஷ் குமார் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உண்மை தான். இருப்பினும், பீகாரை வளர்ச்சி அடைந்த மாநிலமாக்க இது போதாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications