"This Is Business".. கும்பமேளாவில் ‛கல்லா’ கட்டும் இளைஞர்.. போட்டோவை தண்ணீரில் நனைக்க ‛பீஸ்’
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இளைஞர் ஒருவர் தனது பிசினஸை தொடங்கி தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்த யோசனை நமக்கு வரவில்லையே என்று கூறி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ‛மகா கும்பமேளா' நடந்து வருகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அதன்படி இந்த மகா கும்பமேளா மிகவும் சிறப்பானது.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றாக இணையும் திரிவேணி சங்கமத்தில் தான் இந்த கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த கும்பமேளா விழா தொடங்கியது. பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்னும் 3 நாட்களில் மகா கும்பமேளா முடிவுக்கு வர உள்ளது. இதற்கிடையே தான் மகா கும்பமேளாவை வைத்து பலரும் ‛கல்லா' கட்டி வருகின்றனர். பக்தர்களுக்கு ருத்ராட்ச மாலை விற்பனை செய்யும் பிசினஸ் அதிகரித்துள்ளது. அதுதவிர செல்போன் சார்ஜ் செய்வது, பல் துலக்க வேப்பம் குச்சி விற்பனை என புதிதாக பலரும் தொழில்களை தொடங்கி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் தினமும் பல ஆயிரங்களை சம்பாதித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் தான் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் நபர் தனது பெயரை தீபக் கோயல் என்று அறிமுகம் செய்கிறார். பிரயாக்ராஜை சேர்ந்தவர் என்று கூறுகிறார். அதன்பிறகு அவர் பிரயாக்ராஜில் டிஜிட்டல் புனித நீராடல் பற்றி விளக்குகிறார். அதாவது உத்தர பிரதேசத்தின் பிரயக்ராஜில் நடக்கும் மகா கும்பளோவுக்கு செல்ல முடியாதவர்களின் போட்டோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பினால் போதும். அவர்களால் புனித நீராட முடியும். இப்போது என்னிடம் சில போட்டோக்கள் உள்ளன.
இவர்களை டிஜிட்டல் புனித நீராடலுக்கு உட்படுத்தப்போகிறேன் என்று கூறி மகா கும்பமேளா நடக்கும் ஆற்றில் ஓடும் தண்ணீரில் தான் கையில் வைத்திருந்த போட்டோக்களை அவர் மூழ்கவைத்து எடுக்கிறார். இதுதான் டிஜிட்டல் புனித நீராடல் இந்த சேவையை பெற போட்டோ ஒன்று ரூ.1,100 வசூலிக்கப்படுகிறது. எனது செல்போன் எண்ணுக்கு போட்டோவை அனுப்பி வைத்து பணம் செலுத்தினால் அடுத்த 24 மணிநேரத்தில் போட்டோவை நீராட வைப்பேன். இதற்கு பெயர் ‛டிஜிட்டல் ஸ்நான்' என்று அவர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் நல்ல பிசினஸாக இருக்கிறதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர், ‛‛இந்திய மக்களின் தேவையை புரிந்து பிசினஸை தொடங்கி உள்ளார்'' என்று கூறியுள்ளார். அதேபோல் மற்றொருவரோ, ‛‛ச்ச இந்த ஐடியா நமக்கு வராமல் போய்விட்டதே'' என்று கூறுகிறார். மற்றொருவரோ, ‛‛புதுசு.. புதுசா யோசிக்கிறாங்களே.. நாமளும் இந்த வேலைக்கு போயிரலாமா?'' என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மகா கும்பமேளா இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 3 நாட்களில் மகா கும்பமேளா முடிவுக்கு வர உள்ளது. 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவில் மொத்தம் 40 கோடி வரை புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது நீராடியவர்களின் எண்ணிக்கை 55 கோடியை தாண்டி உள்ளது. இதில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பிற அரசியல்கட்சி தலைவர்களும் அடங்குவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications