நெஞ்சே பதறுதே.. கர்ப்பமாக இருந்த நாயை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற இளைஞர்கள்.. சிரிப்பு வேற
டெல்லி: டெல்லியில் குரைத்து தொந்தரவு செய்வதாகக் கூறி கர்ப்பமாக இருந்த நாயை அடித்துக் கொடூரமாக துடிக்க துடிக்க கொல்லப்படும் காட்சிகள் நெட்டிசன்களை உலுக்கியுள்ளது.
மிகவும் நன்றியுள்ள விலங்கு நாய்... வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளில் முதலிடத்தில் நாய்தான் உள்ளது.
ஒருவேளை உணவு கொடுத்தாலும் கூட நம்மை மறக்காது வாலாட்டிக்கொண்டு எப்போதும் நம்மை சுற்றி வரும். எஜமானர்களுக்கு நாய் அளவுக்கு வேறு எந்த விலங்கும் விசுவாசமாக இருக்காது.

டெல்லியில் கொடூரம்
வீட்டிற்கு யாரேனும் அந்நிய நபர்கள் வந்துவிட்டால் நாம் வளர்க்கும் நாயின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. யார் வந்தாலும் முதலில் வீட்டு எஜமானர்களுக்கு கத்தி கூப்பாடு போட்டு காட்டிக்கொடுத்து விடும். இப்படி மனிதனுக்கு விசுவாசமாக வளரும் நாய்களை வீட்டில் உள்ள ஒருவர் போல பார்த்து வளர்க்க பலரும் இருந்தாலும் சில கொடூர மனம் படைத்த நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் தான் தலைநகர் டெல்லியில் ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

குரைத்து தொந்தரவு செய்வதாகக் கூறி
இதயத்தில் கொஞ்சமாவது இரக்கம் உள்ளதா என்று நினைக்க தோன்றும் அளவுக்கு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தின் விவரம் வருமாறு:- தலைநகர் டெல்லியில் டான்பாஸ்கோ தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. டெல்லியில் உள்ள பிரபலமான கல்லுரிகளில் ஒன்றான இந்த கல்லூரி வளாகத்திற்குள் கர்ப்பமாக இருந்த தெருநாய் ஒன்று நுழைந்துள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் இருந்த ஒரு தகரத்தால் ஆன ஷெட் ஒன்றிற்குள் இருந்த நாய், குரைத்து தொந்தரவு செய்வதாகக் கூறி மாணவர்கள் அடித்துக் கொல்ல முடிவு செய்து இருக்கின்றனர்.

துடிக்க துடிக்க அடித்துக் கொன்றனர்
இதற்காக கையில் இரும்பு ராடுகள், பேஸ்பேல் பேட், மரக்கட்டைகளுடன் நாய் பதுங்கியிருந்த ஷெட்டை சுற்றி நின்றனர். ஒரு மாணவன் மட்டும் நாயை கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்ல மீதமுள்ள மாணவர்கள் சிரித்துக்கொண்டே இந்தக் காட்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவி பார்ப்பவரை பதைபதைக்க வைத்துள்ளது. சிறிது நேரத்தில் துடிதுடிக்க இறந்து போன அந்த நாயின் காலை பிடித்து ஒருவர் வெளியே இழுத்து போடுகிறார்.

மிருகத்தனமான செயல்..
இந்தக் காட்சிகளை பார்த்த விலங்கு நல ஆர்வர்களும் கொதித்தெழுந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீடியோவில் இருந்த மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரியில் உள்ள ஊழியர் பேச்சைக் கேட்டு இந்த மிருகத்தனமான செயலில் மாணவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மாணவர்களை சஸ்பெண்ட் செய்யவேண்டும்
எனினும் போலீஸ் விசாரணையில் நாய் குரைத்து தொந்தரவு செய்ததால் அடித்துக்கொல்ல முடிவு செய்ததாக மாணவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். நெஞ்சை பதற வைத்த இந்த சம்பவம் குறித்து பிராணிகள் நல அமைப்பு நிர்வாகி அம்பிகா சுக்லா என்பவர் கூறுகையில், "இளம் மாணவர்களின் இந்த செயல் வேதனை அளிக்கிறது. மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications