தேசிய கொடியை ஏற்றி வைத்து.. முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
டெல்லி: நாட்டின் 75வது குடியரசு தின கொண்டாட்டம் இன்று டெல்லியின் கடமை பாதையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொதுவாக குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த முறை சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
குடியரசுத் தலைவரும், மேக்ரானும் பாரம்பரிய சாரட் வண்டியில் நிகழ்ச்சிக்கு வந்தனர். இந்திய குடியரசுத் தலைவர், குடியரசு தின நிகழ்ச்சிக்கு சாரட் வண்டியில் வருவது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர், டெல்லி கடமை பாதையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் நாட்டின் பெண்களின் சக்தி மற்றும் ஜனநாயக கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டன. சுமார் 90 நிமிடங்கள் நடை பெற்ற குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக முப்படைகளில் உள்ள பெண் படைப் பிரிவினர் பங்கேற்றனர். ராணுவத் தளவாடப் பிரிவில் முதல்முறையாக பணியமர்த்தப்பட்ட 10 பெண் அதிகாரிகளில் தீப்தி ராணா, பிரியங்கா செவ்டா ஆகியோர் பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் குண்டுகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புடன் பங்கேற்றனர்.
வழக்கமாக இடம்பெறும் ராணுவப் பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்குப் பதிலாக 100-க்கும் மேற்பட்ட பெண் இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம், நகாடா போன்ற இந்திய இசை வாத்தியங்களை இசைத்தனர். இந்திய விமானப் படையைச் சேர்ந்த 15 பெண் விமானிகள் விமான சாகசங்களை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து அலங்கார ஊர்த்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
வழக்கமாக ஒரு சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் விடுபடுவது இயல்புதான். அந்த வகையில் இந்த முறை டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications