கம்பீரமாக உரையை தொடங்கிய குடியரசுத் தலைவர்! தமிழ்நாடு + உத்தரப் பிரதேசம்.. சொன்னதை கவனிச்சீங்களா!
டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. தனது உரையில், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடம் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது 5 ஆண்டு காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. மரபுப்படி இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இதில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடம் குறித்து அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தொழில் வழித்தடம்: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், இந்தியாவில் இரு இடங்களில் பாதுகாப்பு தொழில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்டமைப்பு ரூ.20 ஆயிரம் கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டமைப்பு தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதலீடுகள்: இத்திட்டத்தின்படி, பொதுத் துறை மற்றும் தனியாரைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் ரூ.3,123 கோடிக்கு மேல் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான படைக்கலத் தொழிற்சாலை நிறுவனமானது ரூ.2,305 கோடியை முதலீடு செய்துள்ளது. பெல் நிறுவனம் ரூ.140.50 கோடி, பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (பிஇஎம்எல்) ரூ.40 கோடி, பாரத் டைனமிக் நிறுவனம் (பிடிஎல்) ரூ.150 கோடி, மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனம் (எம்டிஎல்) ரூ.150 கோடி முதலீடு செய்துள்ளன.
இவைதவிர, டிவிஎஸ் நிறுவனம் ரூ.50 கோடி, டாடா பாட்டர்ன்ஸ் நிறுவனம் ரூ. 75 கோடி, ஏரோ ஸ்பேஸ் தொழில்துறை மேம்பாட்டு சங்கம் (ஏஐடிஏடி) ரூ.163 கோடி, ஆல்பா டிசைன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி, ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயர்ஸ் நிறுவனம் ரூ.125 கோடி முதலீடு செய்துள்ளன. லட்சுமி மில்ஸ் நிறுவனம் (எல்எம்டபிள்யூ) ரூ.150 கோடி முதலீடு செய்யவுள்ளது.
பலன்: இதன் மூலம், சென்னை, கோவை, ஒசூர், திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்கள் மற்றும் அதனருகில் உள்ள நகரங்களைச் சேர்ந்த சிறு, குறு நிறுவனங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முப்படைகளுக்குத் தேவையான சிறிய உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்கும். இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில்,
"இந்த முதலீடுகளால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேம்படுவதுடன், பாதுகாப்புத் துறைக்கு தேவையான உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறையத் தொடங்கும். முழுவதும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு முப்படைகளுக்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்ய முடியும்" என கூறியிருந்தது.
செங்கோல்: முன்னதாக குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவரை வரவேற்கும் விதமாக செங்கோல் ஏந்திய ஒருவர் முன்னே செல்ல, பின்னே கம்பீரமாக அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். இதற்கு முன்னர் இப்படியான நடைமுறை கிடையாது. புதிய நாடாளுமன்ற கட்டத்திற்காக தமிழ்நாட்டிலிருந்து செங்கோல் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications