பிரக்ஞானந்தா உள்பட தமிழகத்தின் 3 பேருக்கு அர்ஜூனா விருது! சரத் கமலுக்கு கேல்ரத்னா! வழங்கிய ஜனாதிபதி
டெல்லி: சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட 3 பேருக்கு அர்ஜூனா விருதும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று வழங்கினார்.
சர்வதேச போட்டிகளில் சாதித்து பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி சாதனை படைக்கும் வீரர்களுக்கு தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகின்றன.

மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது
இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஒருவர் ஆவார். சென்னையை சேர்ந்த சரத் கமல் இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

அர்ஜூனா விருது
இதேபோல் 25 பேருக்கு அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தமிழகத்தின் கடலூரை பூர்வீகமாக கொண்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில், மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்டவர்களுக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

விருது வழங்கிய ஜனாதிபதி
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி திரெளபதி முர்மு வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கினார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல், பிரக்ஞானந்தா, இளவேனில், ஜெர்லின் அனிகா உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து விருதுகளை பெற்று கொண்டனர்.

யார் இவர்கள்?
இதில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022ல் இந்தியாவுக்கு 3 தங்கள், ஒரு வெள்ளிப்பதக்கத்தை பெற்று தந்தார். இதேபோல் பல்வேறு வகையான செஸ் போட்டிகளில் பதக்கங்களை குவித்த இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு போட்டிகளில் சாதித்த வீராங்கனை இளவேனில் உள்ளிட்டவர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. மேலும் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியான ஜெர்லின் அனிகாவுக்கு வயது 17 தான். இவர் பிரேசிலில் நடைபெற்ற பாரா-ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications