குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. வெல்லப்போவது யார்?
நாட்டின் 15 வது குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்
டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் முதல் வாக்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார். காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநில சட்டசபை அலுவலகங்களில் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி வைத்த ட்விஸ்ட்..யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு!
திரௌபதி முர்மு
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் முர்முவிற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இதனால் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முர்மு வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன.
வாக்குப்பதிவு
குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். டெல்லி சென்று வாக்களிக்க இயலாத எம்.பிக்கள், மாநிலங்களின் தலைமை செயலகத்தில் வாக்களிப்பர்.தமிழக சட்டசபை வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
4800 எம்எல்ஏக்கள் எம்.பிக்கள்
நாடு முழுவதும் சுமார் 4,800 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இத்தேர்தலில் வாக்களிப்பர்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகள் போன்ற நேரடி தேர்தல்களில் வாக்குகளை திரட்டும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, எம்.பி.க்களுக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் வழங்கப்படும். ஒவ்வொரு எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யின் வாக்கின் மதிப்பைக் கண்டறிய தனித்தனி வண்ணங்கள் தேர்தல் அதிகாரிக்கு உதவுகின்றன. வாக்களிப்பதில் ரகசியம் காக்க, தேர்தல் ஆணையம், குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டைக் குறிக்கும் வகையில், வயலட் மையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேனாவை வெளியிட்டுள்ளது.
மொத்த வாக்குமதிப்பு
குடியரசு தலைவர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்.பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. தேர்தலில், எம்.பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200, எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,231. மொத்தமாக 10,86,431 ஆகும்.
மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,893. அதாவது 48.67 சதவீத வாக்குகளை கைவசம் தேசிய ஜனநாயக கூட்டணி தன்வசம் வைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும்.
தமிழக எம்எல்ஏக்கள் வாக்கு மதிப்பு
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208. தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176. தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 41,184 ஆக உள்ளது. இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 62,884 ஆக உள்ளது. 133 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 34 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுகவிற்கு மட்டும் 47,208 வாக்குகள் உள்ளன.
யாருக்கு எவ்வளவு வாக்குகள்
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 எம்.பிக்கள் உள்ளனர் எனவே அக்கட்சியின் வாக்கு மதிப்பு 9,468 ஆக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2,104 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 3,504 வாக்குகளும், ம.தி.மு.க 700 வாக்குகளையும் கொண்டுள்ளது. இதே போல அதிமுகவிற்கு 66 எம்.எல்.ஏக்களும், 5 எம்.பிக்களும் உள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் மொத்த வாக்கு மதிப்பு 15,116 ஆக உள்ளது. ஆனால் தற்போது அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களும், தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ரவிந்திரநாத்தும் நீக்கப்பட்டதால் அதிமுகவின் மொத்த வாக்கு மதிப்பு குறைந்துள்ளது. இருந்த போதும் இந்த 4 பேரும் திரௌபதி முர்முவிற்கு வாக்களிக்கவுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்து 2019 வாக்கில் யூனியன் பிரதேசமாக மாறியது. இதைத் தொடர்ந்து அங்கு இன்னும் சட்டசபை அமையாமல் உள்ளது. இதன் காரணமாக எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு குறையும். தற்போது எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு 708 ஆக உள்ள நிலையில், இது 700 வரை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். ஆகவே ஒரு எம்.பிக்கு 700 வாக்குகள் உள்ளதாக தெரிகிறது. இதை அடுத்து 51 சதவிகித வாக்குகள் அதாவது 5.55 லட்சம் வாக்குகள் பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
குடியரசுத்தலைவர் பதவியேற்பு
ஜூலை 21 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் வெற்றிபெறும் புதிய குடியரசு தலைவர் ஜூலை 25 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தற்போதைய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளும் திரெளபதி முர்முவை ஆதரிக்கின்றன. அதனால் அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதால், நாட்டின் ஜனாதிபதியாகும் முதலாவது பழங்குடி பெண் என்ற பெருமையை பெறுவார்.