ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? குழப்பத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்- டெல்லியில் டேரா!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணியின் திரெளபதி முர்மு-வை ஆதரிப்பதா? அல்லது கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிப்பதா? என முடிவெடுக்க முடியாமல் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இருவருமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இருந்தபோதும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பழங்குடி இன மக்களின் கட்சி. இப்போது பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவை எதிர்க்கட்சியான பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனால் திரெளபதி முர்முவை ஆதரித்தாக வேண்டிய கட்டாயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் பாஜகவின் வேட்பாளரை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரித்தால், காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ள ஜார்க்கண்ட் மாநில கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படக் கூடும் என்கிற அச்சமும் அக்கட்சிக்கு உள்ளது. திரெளபதி முர்மு, ஹேமந்த் சோரன் இருவருமே சந்தால் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தால் பழங்குடி மக்கள்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் வாக்கு வங்கி. ஆகையால்தான் குழப்பத்தில் இருக்கிறார் ஹேமந்த் சோரன்.
இந்நிலையில் டெல்லி சென்ற ஹேமந்த் சோரன், மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு உள்ள நெருக்கடியை தெரிவித்திருக்கிறார் ஹேமந்த் சோரன். மேலும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பகிரங்கமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறினாராம் ஹேமந்த் சோரன்.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று ஹேமந்த் சோரன் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மாநில நலன்கள் குறித்து ஆலோசித்ததாக ஹேமந்த் சோரன் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அமித்ஷாவுடன் விவாதித்ததாகவே கூறப்படுகிறது.