நாளை ஜனாதிபதி தேர்தல்-வாக்குப் பதிவுக்கு ஜரூர் ஏற்பாடுகள்! சென்னையில் கோவா காங். எம்எல்ஏக்கள் தஞ்சம்
டெல்லி: நாட்டின் 15-வது ஜனாதிபதிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தற்பொதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலி 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாளை தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகம், மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் சட்டசபை செயலக வளாகங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும்.

டெல்லியில் எம்.பி.க்கள், மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிகள் வாக்களிப்பர். வாக்குச் சீட்டு முறையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பானது மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்று வாக்களிக்க இயலாத எம்.பிக்கள், மாநிலங்களின் தலைமை செயலகத்தில் வாக்களிப்பர்.தமிழக சட்டசபை வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் சுமார் 4,800 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இத்தேர்தலில் வாக்களிப்பர்.
ஜனாதிபதி தேர்தல் வாக்குப் திவானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். அனைத்து வாக்குகளும் ஜூலை 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தற்போதைய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டிருந்தாலும் காங்கிரஸின் கூட்டணி கட்சிகளும் திரெளபதி முர்முவை ஆதரிக்கின்றன. அதனால் அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதால், நாட்டின் ஜனாதிபதியாகும் முதலாவது பழங்குடி பெண் என்ற பெருமையை பெறுவார்.
இதனிடையே கோவா மாநிலத்தைச் சேர்ந்த 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 5 பேர் திடீரென சென்னை வந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைக்கக் கூடும் என்பதால் 5 எம்.எல்.ஏக்கள் தப்பி சென்னை வந்துள்ளனர். சென்னையில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரது ஏற்பாட்டின் பேரில் கோவா எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications