ஜனாதிபதி தேர்தல் : எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா- ட்விட்டரில் சூசகமாக அறிவிப்பு!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்படுவது உறுதியாகி உள்ளது. இத்தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் யஷ்வந்த் சின்ஹா சூசகமாக அறிவித்துள்ளார்.
நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. வரும் 29-ந் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்..

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் பாஜக அல்லாத 17 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர்களாக சரத்பவார், பரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் மூவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை பொதுவேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தக் கூடும் என தகவல்கள் வெளியாகின.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் யஷ்வந்த் சின்ஹா இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதை நேரடியாக சொல்லாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, தேசிய நலனுக்காக கட்சியில் இருந்து விலகும் நேரம் வந்துள்ளது என கூறியுள்ளார். இதனால் யஷ்வந்த்சின்ஹா, இன்றைய சரத்பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications