ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 அக்டோபர் 31 முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்து வந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி சார்பில் புதிய முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க உள்ளதால் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பாஜக அரசாங்கத்தால் கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, லடாக் இந்த பிராந்தியத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019 அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
அக்டோபர் 11 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்தார் ஒமர் அப்துல்லா. அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக விரைவில் பதவியேற்க இருக்கிறார் ஒமர் அப்துல்லா.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியிட்ட முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகாலமாக செயல்பாட்டில் இருந்த உத்தரவை ரத்து செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியதன் மூலம், ஒமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு, வரும் வாரத்தில் பதவியேற்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications