மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இனிமேல் தூக்கம் இருக்காது.. அகிலேஷுடன் இணைந்து மாயாவதி அதிரடி பேட்டி
Recommended Video

டெல்லி: எங்களது செய்தியாளர் சந்திப்பு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு, தூக்கமில்லாத இரவுகளை கொடுக்கப் போகிறது, என்று சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆகிய இரண்டும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளன.
80 லோக்சபா தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என்று இவ்விரு கட்சிகளின் தலைமையும் முடிவு செய்துள்ளன.

கூட்டணி இல்லை
ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடுவதில்லை என்றும், அதேநேரம் காங்கிரஸை தங்கள் கூட்டணியில் செய்யப்பட்டுள்ளது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் இன்று இதுகுறித்த அறிவிப்பை மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

தூக்கம் இருக்காது
செய்தியாளர் சந்திப்பின்போது, முதலில் மாயாவதி பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எங்களது செய்தியாளர் சந்திப்பு இனிமேல் தூக்கமில்லா இரவுகளை கொடுக்கும். 1993ஆம் ஆண்டு கன்சி ராம் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் முடிவு செய்து இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சில எதிர்பாராத சம்பவங்களால் அந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது.

கசப்புகள் மறப்பு
அப்போது நடைபெற்ற விருந்தினர் மாளிகை போன்ற கசப்பான சம்பவங்களை மறந்து விட்டு கூட்டணி அமைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை இப்பொழுது உள்ளது. எங்களது தொண்டர்களும் இதையே உணர்ந்துள்ளனர். நாங்கள் ஏற்கனவே இடைத்தேர்தலில் இணைந்து போட்டியிட்டு பாஜகவை தோற்கடித்துள்ளோம்.

காங்கிரஸ்
விவசாயிகள், தலித்துகள், ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பழைய கசப்புகளை மறந்து, ஒன்றாக இணைந்துள்ளோம். உத்தரபிரதேசம் மற்றும் இந்த நாட்டை காங்கிரஸ் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளது. ஆனால் தவறான நிர்வாகத்தை அளித்துள்ளது. எனது கட்சி காங்கிரசுடன் நாட்டின் எந்த ஒரு இடத்திலும் கூட்டணி அமைக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, மத்திய அரசு பணக்காரர்களுக்காக செயல்பட்டு வருகிறது. வைர வியாபாரிகளுக்காக புல்லட் ரயில் அறிமுகம் செய்தது. மக்களை பிளவுபடுத்தி ஆட்சி நடத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில், இந்த தந்திரம் பலிக்காது. சரிசமமாக உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதற்காக மாயாவதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கட்சி தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காக பாஜக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்லும். நாங்கள் கண்டிப்பாக அந்த தந்திரங்களை இணைந்து நின்று எதிர்த்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications