நிலநடுக்கத்தால் 128 பேர்! நேபாளம் மீண்டு வர அனைத்து உதவிகளையும் செய்ய தயார்- பிரதமர் மோடி உறுதி
டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 128 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வருத்தமளிப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதிலிருந்து நேபாளம் மீண்டு வர அனைத்து உதவிகளையும் இந்தியா செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்திருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதத்திலும் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனையடுத்து நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சில குலுங்கி சரிந்துள்ளன. அதேபோல இரவு 11 மணிக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று காலை 5 மணி நிலவரப்படி சுமார் 70 பேர் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தின் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜாஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் இரங்கல் தெரிவித்திருக்கிறார். நேபாளத்தின் நிலப்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் நில தகடுகள் நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தமளிப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த இக்கட்டான நேரத்தில் நேபாளுடன் இந்தியா உறுதியுடன் நிற்கிறது என்றும், இதிலிருந்து நேபாளம் மீண்டு வர அனைத்து உதவிகளையும் இந்தியா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications