"சுமார் 45 நிமிடங்கள்.." திடீரென பாகிஸ்தான் மீது பறந்த பிரதமர் மோடியின் விமானம்! உச்சக்கட்ட அலர்ட்
டெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த பல காலமாகவே மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே கடந்த வாரம் பிரதமர் மோடி வெளிநாடு சென்றிருந்த நிலையில், அப்போது பிரதமரின் விமானம் பாகிஸ்தான் மீது பறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் பிரதமரின் விமானம் பாகிஸ்தான் மீது பறந்துள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் உடன் நமக்கு நல்லுறவு இருந்தது இல்லை. இந்தியாவுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுப்பதையே பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது.

பாகிஸ்தான்: இதனால் பல விஷயங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டின் வான்வெளி மீது பிரதமர் மோடியின் விமானம் பறந்ததாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி அளித்த தகவல் அடிப்படையில் இது தொடர்பான செய்திகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பிரதமர் விமானம்: பிரதமர் மோடி கடந்த வாரம் வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்து நிலையில், அப்போது தான் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பிரதமர் மோடியின் விமானம் காலை 10:15 மணிக்குப் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்துள்ளது. சுமார் 46 நிமிடங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் இருந்த பிரதமரின் விமானம் 11:01 மணிக்கு பாகிஸ்தான் வான்வெளியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
பிரதமர் மோடியின் விமானம் சித்ரால் வழியாகப் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் கட்டுப்பாட்டு மையங்களின் கீழ் வரும் பகுதிகளில் பயணித்த பிரதமர் மோடியின் விமானம், அதன் பிறகு பஞ்சாபின் அமிர்தசரஸ் வழியாக இந்தியாவுக்குள் வந்துள்ளது.
ஏன் முக்கியம்: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரதமரின் விமானம் ஒரு நாட்டின் மீது பறக்கச் சிறப்பு அனுமதி எல்லாம் தேவையில்லை.. அனைத்து விமானங்களைப் போலத் தான் அனுமதி உள்ளது. சில சமயங்களில், பிரதமரின் விமானத்திற்கு அழைப்புக் குறியீடு மட்டும் ஒதுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்தது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தனது வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதைப் பாகிஸ்தான் கடை செய்தது. தனது வான்வெளியை முற்றிலுமாக மூடியது. அதே ஆண்டில், பிரதமர் மோடி ஜெர்மனிக்குச் சென்ற நிலையில், அப்போது பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. இருப்பினும், இந்த கோரிக்கையைப் பாகிஸ்தான் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இப்போது பாகிஸ்தான் வான்வெளியில் இந்தியப் பிரதமர் மோடி பறந்துள்ளார்.
மோடி அரசு முறை பயணம்: பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 21-22 தேதிகளில் போலந்துக்கு சென்றார். கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கலந்து செல்வது இதுவே முதல்முறை. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைன் நாட்டிற்கும் சென்றார். 1990களில் உக்ரைன் உருவான பிறகு அங்குச் செல்லும் முதல் பிரதமர் என்ற சாதனையும் பிரதமர் மோடி படைத்தார். அங்குப் பிரதமர் மோடி இருந்தது என்னவோ வெறும் 7 மணி நேரம் தான். ஆனால், அங்குச் செல்ல சுமார் 20 மணி நேரம் அவர் ரயிலில் பயணிக்க வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications