வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயம்… டெல்லியில் வெளியிட்டார் பிரதமர் மோடி
டெல்லி : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம், சிறந்த நிர்வாக தினமாக நாளை கொண்டாடப்படுகிறது. மறைந்த பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளுக்கு அவரது பெயரை மத்திய அரசு சூட்டி உள்ளது.

மேலும் வாஜ்பாய்க்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.
விழாவில் பாஜக தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அத்வானி. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வாஜ்பாய் நம்மிடம் இல்லை என்பதை நமது மனம் ஏற்க மறுக்கிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.
சிறந்த நிர்வாகியான வாஜ்பாய் மேம்பட்ட பேச்சாளராக திகழ்ந்தார். நமது நாடு தந்த சிறந்த சொற்பொழிவாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
வாஜ்பாய் உருவாக்கிய பாஜக இன்று நாட்டின் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. அவரது சேவையை என்றென்றும் நாம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
35 கிராம் எடை கொண்ட இந்த 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர், தேவநாகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அருகில் வாஜ்பாய் வாழ்ந்த காலமான 1924-2018 என்று பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிங்க சின்னமும், அதற்கு கீழ் 100 ரூபாய் குறியீடும், 'சத்தியமேவ ஜெயதே' என்ற தேவநாகரி எழுத்துகளும் இடம் பெற்றுள்ளது. இந்த நாணயம் வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications