ஜாக்பாட்.. 71 ஆயிரம் பேருக்கு வேலை.. 45 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்.. பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
டெல்லி: தேசிய அளவில் இன்று 45 இடங்களில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், இளைஞர் நலன்களை ஊக்குவித்த போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. அதாவது நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்போம் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவர் வாக்கு கொடுத்ததைப்போல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. மாறாக வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டன என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இன்னும் ஓராண்டில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இதில் மீண்டும் வெற்றிக்கொடியை நாட்ட வேண்டுமெனில் வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியில் பாஜக இருக்கிறது. எனவே தற்போது நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று (மே 16) பிரமாண்ட வேலைவாய்ப்புகள் முகாமை மத்திய அரசு நடத்துகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வழியாக கலந்து கொள்கிறார். அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் தபால் ஊழியர் முதல் கல்லூரி முதல்வர் வரையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சுமார் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். அதேபோல இந்த நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெறுவோருடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்நிகழ்வில் இவற்றில் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
மத்திய அரசுத்துறைகள் மட்டுமல்லாமல்,மாநில அரசுகள். யூனியன் பிரதேச அரசுத் துறைகளின் ஆதரவுடன் இந்த முகாம்கள் மாதந்தோறும் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தபால் துறை ஊழியர், தபால் துறை ஆய்வாளர், ரயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இள நிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்காளர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரி கள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமைக் காவலர், உதவி கமாண்டன்ட், பள்ளி, கல்லூரி முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட உள்ளன.
புதிய நியமனதாரர்கள் அனைவருக்கும் இணைய வழியாக புத்தாக்கப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காக கர்மயோகி ப்ராரம்ப் இணையதளத்தை ஏற்கெனவே கடந்தாண்டு பிரதமர் தொடங்கிவைத்தார். இது பல்வேறு அரசுத் துறைகளின் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிடத்தில் நெறிமுறையும், நேர்மையும், மனிதவளக் கொள்கைகள், பணிக்கால பயன்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள உதவுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மத்திய அரசு மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications