குட்நியூஸ்.. ரூ.1.5 லட்சம் கோடி ஏலம்! இந்தியாவில் “ஒரு வாரத்தில்” 5ஜி சேவை - தொடங்கி வைக்கிறார் மோடி
டெல்லி: இந்தியாவில் 5ஜி அலைவரிசை ஏலம் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் வழங்கியது. உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது.
5ஜி அலைவரிசை மூலம் சேவைகள் கிடைத்தால் தற்போது அமலில் உள்ள 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3ஜியை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் நமக்கு கிடைக்கும். இந்தியாவில் 5ஜி சோதனை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

5 ஜி ஏலம்
இந்த நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன. முதல் நாளன்று 4 சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்று உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 40 சுற்று ஏலத்தில் 4 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக மத்திய தொழில்நுட்பத்துறை தெரிவித்து இருந்தது.

சாதனை
முதல் நாள் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர் என்றும் இது கடந்த 2015 ல் நடைபெற்ற 4ஜி ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். 40 வது சுற்று ஏலம் முடிந்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் ரூ.1,50,173 கோடி ஏலத்தை மத்திய அரசு பெற்று இருக்கிறது.

ஜியோ
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட 5ஜி சேவையை வழங்குவதாக தெரிவித்து உள்ளது. 22 சுற்றுகளிலும் தங்கள் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியதாகவும், 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz and 26GHz ஆகிய பேண்டுகளை தங்கள் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் இதில் 700MHz பேண்ட் சிறப்பான 5ஜி சேவையை வழங்க உதவும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஊழல் புகார்
5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறினார். ஆனால் ஏலத்தில் ரூ.4.3 லட்சம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளதை காரணமாக கூறி எதிர்க்கட்சிகள் பலர் இதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினர்.

ஒரு வாரத்தில்..
இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட இருக்கிறது. வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி அலைவரிசை சேவையை தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications