கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை
தூத்துக்குடி: தவெக அமைச்சர்கள் தங்களது துறைகளின் செயல்பாடு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை முழுமையாக அறிந்த பிறகே ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும், துறை சார்ந்த விஷயங்களை அதிகாரிகளுடன் ஆலோசித்து பின்னர் பத்திரிகையாளர்களை சந்திப்பது சிறந்த அணுகுமுறை என்றும் பாஜக பிரமுகரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு அமைந்து இரண்டு வாரம் இன்னும் முழுமையாகவில்லை.. அதேபோல் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.. துறைக்கு பலரும் புதியவர்கள் என்பதால், அவர்கள் தடுமாறுவதை கிண்டல் செய்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அமைச்சர் கீர்த்தானா, ரமேஷ் உள்பட பல்வேறு அமைச்சகர்களின் பிரஸ் மீட்டை விமர்சித்து வருகிறார்கள். இதுபற்றி நடிகர் சரத்குமார் அறிவுரை தந்துள்ளார்.

பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சரத்குமார் கூறுகையில், "தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலைக்குரியது.
இதுபோன்ற குற்றங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், பலமுறை பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன். தண்டனைகள் உறுதியாகவும் கடுமையாகவும் அமல்படுத்தப்பட்டால்தான் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதற்கான மனநிலை குறையும் என நான் நம்புகிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், பின்னர் ஸ்டாலின் ஆட்சியிலும் கணிசமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது, தற்போது 500 கடைகள் மூடப்படுகிறது., தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலை உருவாக்கப்படும் என அறிவித்தால் அது ஒரு நல்ல முடிவாக இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து கேட்கிறீங்க.. உலகளாவிய சூழ்நிலைகள் காரணமாக இதை முழுமையாக தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்து பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் விலை உயர்வுகள் நிகழ்கிறது, பல நாடுகள் இணைந்து இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது. போர் நிறுத்தம் மற்றும் உலகளாவிய சமநிலை ஏற்பட்டால்தான் அடுத்த சில மாதங்களில் நிலைமை சீராக வாய்ப்பு இருக்கிறது. இது இயல்பான பொருளாதார நிகழ்வு" என்றார்.
கூட்டணி ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு, "நான் ஜோசியர் கிடையாது" என்று சுருக்கமாக சரத்குமார் பதிலளித்தார். அரசின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும்போது, அரசு வெற்றி பெற்ற உடனேயே குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விட, ஒரு கால அவகாசம் கொடுத்து நிர்வாகத்தை புரிந்துகொண்டு பின்னர் பேசுவது நல்லது என்று சரத்குமார் கூறினார்
மேலும், தவெக அமைச்சர்கள் தங்களது துறைகளின் செயல்பாடு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை முழுமையாக அறிந்த பிறகே ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார். துறை சார்ந்த விஷயங்களை அதிகாரிகளுடன் ஆலோசித்து பின்னர் பத்திரிகையாளர்களை சந்திப்பது சிறந்த அணுகுமுறை என்றும் பாஜக பிரமுகர் சரத்குமார் தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications