வாரிசு அரசியல் ஆபத்தானது..கட்சிக்குள் குடும்ப அரசியலுக்கு அனுமதியில்லை.. பிரதமர் நரேந்திர மோடி உறுதி
டெல்லி : வாரிசு அரசியல் மிக மிக ஆபத்தானது எனவும், பாஜகவுக்குள் குடும்ப அரசியலை அனுமதிக்க முடியாது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தல்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.
கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. ஆனால், பஞ்சாபில் அந்த கட்சி அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.

பாஜக எம்பிக்கள் கூட்டம்
இந்த நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில் சமீபத்தில் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், உக்ரைன் நாட்டில் பலியான மாணவர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

பிரதமர் மோடி
பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் கட்சியில் வாரிசு அரசியல் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "குடும்ப அரசியலை கட்சிக்குள் அனுமதிக்க முடியாது. மற்ற கட்சிகளிலும் வாரிசு அரசியலை எதிர்த்து பாஜக எம்பிக்கள் போராட வேண்டும். ஜனநாயக நாட்டில் வாரிசு அரசியல் ஏற்புடையது அல்ல. பா.ஜனதா கட்சியின் கொள்கைகள் வாரிசு அரசியலுக்கு எதிரானது.

வாரிசு அரசியல் ஆபத்து
அதனால்தான் பா.ஜனதாவில் எம்.பி.க்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதை மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். பா.ஜனதாவின் இந்த கொள்கையால் 5 மாநில தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. இதை உணர்ந்து மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல , அடுத்து வரவுள்ள அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டுமெனவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

தி காஷ்மீர் பைல்ஸ் படம்
இந்த சந்திப்பின் போது போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்படுவது குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மக்களை மீட்டுக் கொண்டு வருவதில் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் முதல்வர்கள் செய்த "அரசியல்" பற்றியும் பிரதமர் மோடியிடம் கூறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தி காஷ்மீர் பைல்ஸ் படம் மிகவும் நல்ல படம் என்று கூறிய பிரதமர் மோடி, கூடியிருந்த அனைவரையும் அப்படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications