லெபனான் மீது உக்கிர தாக்குதல்... பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியது என்ன?
டெல்லி: லெபனான் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கானோரை படுகொலை செய்திருக்கிறது இஸ்ரேல். உலக நாடுகளை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது இஸ்ரேலின் இந்த தீவிர தாக்குதல். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லெபனான் நாட்டில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை இஸ்ரேல் அழித்த்உ வருகிறது. இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் நடத்தி வரும் தாக்குதலில் கொத்து கொத்தாக பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது லெபனான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல். லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அடுத்ததாக அந்நாட்டுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் 3-வது உலகப் போரை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதாக சர்வதேச சமூகம் பெரும் அச்சம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேல் பிரதமர் திரு. பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தார்.
பயங்கரவாதத்திற்கு எந்த வடிவத்திலும் இடமில்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிராந்திய அளவில் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும், பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிக்கவும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும் ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு பிரதமர் நேதன்யாகுவிற்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications