பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருடன் “ஆக்கப்பூர்வ” பேச்சு.. இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை..!
டெல்லி : இரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் விவகாரம், இருநாட்டு நல்லுறவு உள்ளிட்டவை குறித்து " ஆக்கப்பூர்வ" பேச்சுவார்த்தை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஜப்பான் டுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை நிறுவி 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு இன்று நடைபெற்றது.
கடந்த 3 ஆண்டுகளாக இரு நாடுகளிடையேயான உச்சி மாநாடுகள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாட்டை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஜப்பான் பிரதமர்
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் தலைநகரை உலுக்கிய மாபெரும் போராட்டங்களை அடுத்து, பிரதமர் மோடி மற்றும் அவரது அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையேயான வருடாந்திர உச்சிமாநாடு 2019 டிசம்பரில் கவுகாத்தியில் நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. அதற்கடுத்து கொரோனா தொற்றுநோய் காரணமாக உச்சிமாநாட்டை 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் நடத்த முடியவில்லை.

14வது உச்சி மாநாடு
இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான 14வது வருடாந்திர உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. முன்னதாக பிரதமர் மோடி 202ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் தொலைபேசியில் அவர் பதவியேற்றவுடன் பேசினார். இரு நாடுகளிடையேயான உறவு, முதலீடு மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர். இதனிடையே பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஜப்பான் அரசின் உயர்மட்டக் குழுவுடன், ஜப்பானிய அரசின் தலைவராக தனது முதல் இந்தியா பயணமாக மாலை 3:40 மணியளவில் டெல்லிக்கு வந்தார்.

பிரதமர் மோடியுடன் பேச்சு
புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் நடைபெற்ற 14-வது உச்ச மாநாட்டில் இருவரும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் கிஷிடா இடையேயான உச்சிமாநாட்டின் நிகழ்ச்சியில் இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேசினார்.

உக்ரைன் விவகாரம்
ஜப்பான் பிரதமர் கிஷிடா இந்தியா வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜப்பானின் நிக்கேய் செய்தி நிறுவன, அவர் தனது இந்திய பயணத்தின் போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் ( 42 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யும் திட்டத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என செய்தி வெளியிட்டது. குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பிரதமர் கிஷிடா தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு கம்போடியா செல்லவுள்ள நிலையில், முன்னதாக இந்தியா வருவதற்கு முன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று கூறிய நிலையில், உக்ரைன் நிலைமை குறித்து இந்தியாவுடன் தனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications