அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு கணவரை டிராப் செய்து விட்டு கட்சி பொறுப்பை "பிக்கப்" செய்த பிரியங்கா!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி நேற்றைய தினம் இரு அதிரடிகளை செய்துள்ளார். இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அக்கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
பொதுவாக அதிக நாடாளுமன்றத் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியே டெல்லியில் அரியணை ஏறும் என்பது எழுதப்படாத விதியாகும்.

முடிவு
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மாநில கட்சிகளான பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் காங்கிரஸை கைவிட்டது. இதனால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் தனது பலம் தேடி வந்தது. அப்போதுதான் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை களமிறக்க வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்தது.

தொண்டர்கள்
அதன்படி மறைமுக அரசியலில் இருந்த பிரியங்கா உத்தரப்பிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே உ.பி. மக்களுக்கு நன்கு பரிட்சயமான பிரியங்காவுக்கு புதிய பதவி கொடுத்ததை எண்ணி தொண்டர்கள் பூரிப்படைந்தனர்.

பொறுப்பு
இந்த நிலையில் நேற்றைய தினம் பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முன்பு அவர் ஓர் அதிரடியை செய்தார். கணவர் ராபர்ட் வத்ரா மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக அவர் அமலாக்கத் துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

தொண்டர்கள் பூரிப்பு
இதுவரை வத்ராவுடன் விசாரணைக்கு செல்லாத பிரியங்கா, நேற்று வத்ராவை அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுப்பிய கையோடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பிரியங்காவின் இந்த அதிரடியால் திக்குமுக்காடிய கட்சியினர் அவர் மேலும் பல்வேறு அதிரடிகளை செய்வார் என்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications