தடுப்பூசி போடும் திட்டத்தில்.. மோடி அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது.. பிரியங்கா பாய்ச்சல்!
டெல்லி: தடுப்பூசி போடும் திட்டத்தில் மோடி அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று சற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது. 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 1,50,000-க்கு கீழே சென்றுள்ளது.
இன்னும் 6 மாதங்களில்..அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு vs கள நிலவரம் என்ன
இந்தியாவில் தடுப்பூசி
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்ததாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
இந்தியாவில் கொவோக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் திட்டமிட்டபடி இந்த திட்டத்தை தொடங்க முடியவில்லை. பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி இல்லாமல் திண்டாடி வருகின்றன. தமிழகத்தில் கூட பற்றாக்குறை காரணமாக 3 நாள்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு சரியாக திட்டமிடாததே இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
3.4% பேருக்கே தடுப்பூசி
ஆனாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இது எப்படி சாத்தியமாகும் என்று காங்கிரசின் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ' இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒன்று. இன்னும் நமது மக்கள் தொகையில் 3.4% பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
யார் பொறுப்பு?
இந்தியாவின் குழப்பமான தடுப்பூசி திட்டத்திற்கு யார் பொறுப்பு? மோடி அரசு தடுப்பூசி போடும் திட்டத்தில் முழுமையாக தோல்வியடைந்து விட்டது. 1.9 மில்லியன் பேருக்கே தினமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதை 7 அல்லது 8 மில்லியனாக அதிகரிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்திய அரசே காரணம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.