அலகாபாத் எம்பி தொகுதியில் போட்டியிட அட்வைஸ்.. என்ன செய்ய போகிறார் பிரியங்கா காந்தி?
டெல்லி: அலகாபாத் எம்பி தொகுதியில் போட்டியிடுமாறு பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அமேதியிலும், வயநாட்டிலும் போட்டியிடுகிறார். அவரது தங்கை பிரியங்கா காந்தி தற்போது நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் சோனியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிரியங்கா, ரே பரேலியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அது போல் எதுவும் நிகழவில்லை. இதையடுத்து அவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.
அதனால்தான் காசியில் முதல் பிரசாரத்தை பிரியங்கா தொடங்கியதாகவும் கூறப்பட்டது. எல்லா தகவல்களும் யூகமாகத்தான் கூறப்படுகின்றனவே தவிர எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் பிரியங்கா காந்தியை அலகாபாத்தில் போட்டியிடுமாறு அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் அலகாபாத்தில் போட்டியிடுமாறு பிரியங்கா காந்தி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றிருக்கிறது. அவர் வேட்புமனு தாக்கல் செய்வதே பூர்வாஞ்சல் பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். கட்சியின் மூத்த தலைவரும் நாட்டின் முதல் பிரதமருமான நேரு, லால் பகதூர் சாஸ்திரி, விஜயலட்சுமி பண்டிட், விபி சிங் ஆகியோர் அலகாபாத் மற்றும் புல்பூர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களாவர்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அலகாபாத்தில் 1984-இல் நடிகர் அமிதாப் பச்சன் வெற்றி பெற்றார். இந்த அலகாபாத் தொகுதி கடந்த ஆண்டு பிரயக்ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications