நபிகள் அவதூறு- நுபுர் சர்மாவை கைது செய்ய உத்தரவிட கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய உத்தரவிடக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டிவி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்த நுபுர் சர்மா அவதூறாக பேசினார். இது மிகப் பெரும் சர்ச்சையாக, சர்வதேச விவகாரமாக வெடித்தது. நுபுர் சர்மாவின் பேச்சுக்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல நாடுகள் வலியுறுத்தின. இதனால் நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதேநேரத்தில் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. கான்பூர் உள்ளிட்ட இடங்களில் இப்போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. நுபுர் சர்மா மீது பல மாநிலங்களில் போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன.
நுபுர் சர்மா வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்; நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் இத்தகைய வார்த்தைகள் இடம்பெறாமல் இருந்தது. மேலும் நுபுர் சர்மா தொடர்பான விமர்சனங்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது.
இதன்பின்னர் நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நுபுர் சர்மாவை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் நுபுர் சர்மாவை கைது செய்ய உத்தரவிடக் கோரும் அபு சோஹெல் என்பவரது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் ரவீந்தரா பட், நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
அப்போது, இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர்.












Click it and Unblock the Notifications