நபிகள் நாயகம் சர்ச்சை: பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தப்பி ஓடி தலைமறைவு?
டெல்லி: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக விமர்சித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை மகாராஷ்டிரா போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நபிகள் நாயகம் குறித்து டிவி விவாதம் ஒன்றில் நுபுர் சர்மா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. நுபுர் சர்மாவின் அவதூறுக்காக மத்திய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அரபுநாடுகள் வரிந்து கட்டின. மத்திய அரசும் பல்வேறு விளக்கங்களை கொடுத்தது.

சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்த நுபுர் சர்மா, பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. நுபுர் சர்மாவை போலீசாருக்கும் விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் நுபுர் சர்மா எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என மகாராஷ்டிரா போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நுபுர் சர்மாவை தேடி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
நுபுர் சர்மா, மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு தப்பி சென்றிருக்கக் கூடும் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள மகாராஷ்டிரா போலீசார், நுபுர் சர்மாவை தீவிரமாக தேடுகின்றனர்.












Click it and Unblock the Notifications