மத்திய பாஜக அரசின் வக்பு மசோதாவுக்கு எதிராக வெடித்தது போராட்டம்-டெல்லியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தர் முன்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பாக இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்த கண்டனப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் இருக்கும் முஸ்லிம்களின் வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான வக்ஃபு வாரிய சட்டத்தில் மத்திய பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தங்கள் அமலுக்கு வந்தால் வக்ஃபு வாரிய சொத்துகளில் 50% அரசால் கையகப்படுத்தப்பட்டுவிடும் என்பது திமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு. இதனால் நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதன் பின்னர் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவர பரிந்துரை அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் இந்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் நிலைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதேநேரத்தில் நாடு முழுவதும் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பாக இன்று வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் பங்கேற்றனர். அதேபோல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், தலைவர்களும் இன்றையப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
#WATCH | All India Muslim Personal Law Board (AIMPLB) protests against Waqf (Amendment) Bill 2024, at Delhi's Jantar Mantar pic.twitter.com/eqBaWM16u8
— ANI (@ANI) March 17, 2025
ஆனால் இப்போராட்டத்துக்கு எதிராக உ.பி.யைச் சேர்ந்து இந்துத்துவா அமைப்பினர் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லி ஜந்தர் மந்தரிலேயே இந்தப் போராட்டத்துக்கு எதிராக சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் விரைந்து வந்து அப்புறப்படுத்தினர். இதனால் டெல்லி ஜந்தர் மந்தரில் பதற்றமும் ஏற்பட்டது. அப்பகுதியில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications