"இந்த" ஸ்லோகன்கள் எல்லாம் அரசியலுக்குத்தான் பொருந்தும்.. நடைமுறையில் கடினம்.. பிடிஆர் பழனிவேல்
ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே தீர்ப்பாயம் ஆகிய ஸ்லோகன்கள் எல்லாம் அரசியலுக்குத்தான் பொருந்தும்- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
டெல்லி: ஸ்லோகம் எல்லாம் அரசியலுக்குத்தான் பொருந்தும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என் முருகானந்தம், வணிகவரித் துறை ஆணையர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல் தியாகராஜன், 2020- 21 ஆம் ஆண்டு இழப்பீடு வர வேண்டும். இன்று (நேற்று) ஒரு முக்கிய விவாதம் நடந்தது. அப்பெல்லேட் டிரிபூனல் எனப்படும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மாநில அளவில் இருக்க வேண்டுமா? ஒன்றிய அளவில் இருக்க வேண்டுமா, அதில் யார் உறுப்பினர்களாக இருக்க வேண்டும், எந்தெந்த தேர்வு குழு இருக்க வேண்டும் என்ற நீண்ட விவாதம் நடந்தது.

துணை குழு
இதற்காக அமைக்கப்பட்ட துணைக் குழுவினர் போட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு சுமார் 12,13 மாநிலங்கள், இந்த திட்டம் சரியில்லை என கூறி எதிர்ப்புத் தெரிவித்தன. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தீர்ப்பாய உறுப்பினர்களை நியமனம் செய்வதில் மாநிலங்களுக்கு கூடுதல் பங்கு வேண்டும் என்று அந்த குழுவின் அறிக்கையை ஏற்கவில்லை.

விவாதம்
அதனால் 2 அல்லது 3 மணி நேரம் விவாதம் நடந்து திருத்தங்களை ஏற்றுக் கொண்டு நிறைவுக்கு வரக் கூடிய சூழலுக்கு வந்திருக்கிறது. ஆனால் இன்னும் ஒப்புதல் பெறவில்லை. இது தொடர்பான சில புள்ளி விவரங்களை மாநிலங்களுக்கு அனுப்பிய பிறகு ஒப்புதல் பெற இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இது முக்கியமான ஒரு முன்னேற்றம், ஏனென்றால் இந்த தீர்ப்பாயம் இல்லை என்றால் தவறாக வரி விதிக்கப்படுகிறது என நினைக்கும் யார் வேண்டுமானாலும் நேராக உயர்நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது.

தீர்ப்பாயம்
இதை மாற்றி தீர்ப்பாயத்திற்கு செல்ல வழிவகை செய்யப்பட்டால் வேலைகள் எல்லாம் எளிதாக நடக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில் ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தீர்ப்பாயம் என்று ஸ்லோகன் வைத்து அரசியல் செய்வது சுலபம். அதை செயல்படுத்துவதுதான் கடினம். ஒரே நாடு ஒரே அரசியலமைப்பில் எதற்கு இத்தனை சட்டசபை இருக்கிறது, ஒரே நாடு ஒரே சட்டமைப்பில் எதற்கு இத்தனை நீதிமன்றங்கள் இருக்கிறது என ஜிஎஸ்டி திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவிடம் கேள்வி எழுப்பினேன். ஸ்லோகன் வைத்து பேசுவது எல்லாம் அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டுக்கு வராது.

கூட்டாட்சி தத்துவம்
கூட்டாட்சித் தத்துவத்தில் அனைத்து மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் என்றளவுக்கு எங்களுக்கு நம்பிக்கை வந்தால்தான் உண்மையிலேயே ஒரே நாடு ஒரே வரியை செயல்படுத்த முடியும். தமிழகத்திற்கு ரூ 4230 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி தீர்ப்பாயங்கள் மாநிலங்களில் அமைக்க வேண்டும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளும் வழங்கப்பசும் என்றார். தமிழக நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதவியேற்றது முதல் மத்திய அரசை ஜிஎஸ்டி விவகாரங்கள், வரி விதிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ல்லோகன்களில் கடுமையாக எதிர்த்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போது மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.












Click it and Unblock the Notifications