இரட்டை இலை: எடப்பாடிக்கு செக்!? தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
டெல்லி: மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை எனக் கூறி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய தேர்தல் ஆணையத்தின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய மனு மீதும் நடவடிக்கை இல்லை மாநிலங்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார் புகழேந்தி.
புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், காலியாக உள்ள ஆறு பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதிமுக தரப்பில் இருவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த விசாரணை முடிவடையாமல் வேட்பாளரை அங்கீகரித்து எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் கடிதத்தை ஏற்கக் கூடாது என்று தனது தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இரட்டை இலை விவகாரத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 14 மாதங்களாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக மற்றும் இரட்டை இலை விவகாரம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும், அது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த செயல் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய உத்தரவுக்கு எதிரானது. எனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய தேர்தல் ஆணையத்தின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், காலம் தாழ்த்தும் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை தேவை என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications