நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
நேற்று நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தநிலையில், டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள, உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்களுக்கு காங். தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முப்படை தலைவர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, வீரர்களின் சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியத்தின் உடல், முழு அரசு மரியாதையுடன் நாளை மதியம் 12 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், புல்வாமா தாக்குதல் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.