பஞ்சாப் சட்டசபைத் தேர்தல்: ராகுல் காந்தியுடன் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு!
டெல்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
2017-ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தற்போதைய காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் பிரசாந்த் கிஷோர். அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்றது.

வென்றது பி.கே. வியூகம்
அண்மையில் தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்தார் பிரசாந்த் கிஷோர். திமுகவும், திரிணாமுல் காங்கிரஸும் சட்டசபை தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சியை கைப்பற்றியது; மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக மமதா பானர்ஜி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.

இனி வியூகப் பணி இல்லை
அப்போது இனி தாம் தேர்தல் வியூகப் பணிகளை மேற்கொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்தார் பிரசாந்த் கிஷோர். ஆனால் அண்மையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை 2 முறை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒன்றை டெல்லியில் சரத்பவார் கூட்டியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ராகுல் காந்தியுடன் இன்று சந்திப்பு
இந்நிலையில் இன்று டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் கே.கே. வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இச்சந்திப்பில் பஞ்சாப் சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் தேர்தல் வியூகம்?
பஞ்சாப் தேர்தல் நெருங்கும் நிலையில் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு முக்கியத்துவம் அளிக்க டெல்லி தலைமை விரும்புகிறது. அவரை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர், துணை முதல்வராக நியமிக்கலாம் என்கிறது டெல்லி மேலிடம். ஆனால் முதல்வர் அமரீந்தர்சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு சந்திப்புகள் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இந்த பின்னணியில் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications