2 தொகுதிகளில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் போட்டி! காரணம் என்ன தெரியுமா? விளாசும் ஆம் ஆத்மி
டெல்லி: பஞ்சாப் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி 8 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிப். 20இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 5 மாநிலங்களில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், அதை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதால் பஞ்சாப் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

காங்கிரஸ்
இருப்பினும், அங்கும் காங்கிரஸ் கட்சிக்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அமரிந்தர் சிங் வெளியேறி புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவருக்குப் பதில் சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவை தேர்தலில் வாக்குகளாக மாறுமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

2 தொகுதிகளில் போட்டி
இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் முதல்வர் சரன்ஜித் சிங் பஞ்சாபின் பதூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 2007 முதல் எம்.எல்.ஏ.வாக உள்ள சம்கவுர் சாஹிப் தொகுதியில் இருந்து சரன்ஜித் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சரண்ஜித் சிங் சன்னி
எந்தவொரு நபரும் ஒரு தேர்தலில் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் போட்டியிடலாம். முன்னதாக கடந்த 2014 மக்களவை தேர்தலில் கூட வதோதரா, வாரணாசி என இரு தொகுதிகளில் மோடி போட்டியிட்டார். அதேபோல 2019 தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் சரண்ஜித் சிங் சன்னி 2 தொகுதிகளில் - பதூர் மற்றும் சம்கவுர் சாஹிப் போட்டியிட உள்ளார்.

ஆம் ஆத்மி
இதை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "எங்கள் சர்வே படி சரண்ஜித் சிங் சம்கவுர் சாஹிப் தொகுதியில் வெல்ல வாய்ப்பில்லை. இதனால் தான் அவர் இரண்டு இடங்களில் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் எங்கள் சர்வே உண்மை என்றே தெரிய வருகிறது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிக்கல்
அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உடன் 58 வயதான சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக ஆக்கப்பட்டார். முதலில் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளராகத் தான் சரண்ஜித் சிங் சன்னி அறியப்பட்டார். இருப்பினும், கடந்த சில வாரங்களாக அவருடனும் நவ்ஜோத் சிங் சித்து மல்லுக்கட்டத் தொடங்கியுள்ளார். இது வெல்ல வேண்டிய இடத்தில் காங்கிரஸ் கட்சியே வலியச் சென்று தோல்வியைப் பெறும் நடவடிக்கை எனப் பலரும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications