"நரேந்திர புதின்.." 2024 தேர்தலில் மட்டும் பாஜக வென்றால் அவ்வளவுதான்.. பகவந்த் மான் சர்ச்சை பேச்சு
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பஞ்சாபில் இப்போது பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முன்பு அங்கே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து அங்கே பகவந்த் மான் முதல்வராகப் பதவியேற்றார். ஆம் ஆத்மி டெல்லிக்கு வெளியே ஆட்சியைப் பிடிப்பது இது முதல்முறை என்பதால், அக்கட்சியினர் இந்தத் தேர்தல் வெற்றியை மிக முக்கியமானதாகப் பார்த்தார்கள்.
பகவந்த் மான்: இதற்கிடையே டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் மெகா பேரணியில் கலந்து கொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான ஆம் ஆத்மி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசி பகவந்த் மான், 2024 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் நரேந்திர மோடி, நரேந்திர புதினாக மாறுவார் என்று சாடி பேசினார்.
அவர் மேலும் கூறுகையில், "2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அதன் பிறகு இந்தியாவில் நிச்சயம் தேர்தல் என்ற ஒன்றே நடக்காது. 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நரேந்திர மோடி நரேந்திர புதினாக மாறுவார். பாஜக தலைவர்கள் மோடியை ஏற்கனவே இந்தியாவின் மாலிக் என்று அவரை கருதத் தொடங்கிவிட்டனர்.
140 கோடி இந்தியர்கள் இந்தியாவைக் காப்பாற்ற முடிவு செய்தால், நாடு காப்பாற்றப்படும்" என்று அவர் தெரிவித்தார். டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது குறித்த மத்திய அரசின் கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணியை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் தான் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்..
போராட்டம்: இந்த பேரணியில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி ஆம் ஆத்மி தலைவரும் அமைச்சருமான கோபால் ராய், ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராகவே ஆம் ஆத்மி இந்தப் போராட்டத்தை நடத்துகிறது. அதாவது அங்கே அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் டெல்லி அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதையடுத்து மத்திய அரசு அதிகாரிகள் நியமனத்தில் குழு அமைத்து அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது.
இது அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கு இருந்த அதிகாரத்தை நீக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்தே ஆம் ஆத்மி கட்சி இப்போது இந்த மெகா பேரணியை நடத்தியுள்ளனர். முன்னதாக இந்த சட்டத்தை ராஜ்ய சபாவில் தோற்கடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் மாநிலம் முழுக்க உள்ள எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications