"சார் ஒரு செல்பி" சித்து மூஸ் வாலாவை நெருங்க பக்கா ஸ்கெட்ச்..காட்டிக் கொடுத்த சிசிடிவி.. பரபர தகவல்
டெல்லி: பஞ்சாப் இளம் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாருக்கு முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பாடகர் 28 வயதான சித்து மூஸ் வாலா. பஞ்சாபில் மிகவும் பிரபலமான இளம் பாடகர்களில் ஒருவராக இருந்த இவர், அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மூஸ் வாலா சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டார். இருப்பினும் அவரால் வெல்ல முடியவில்லை,

மூஸ் வாலா கொலை
இந்நிலையில், கடந்த வாரம் இந்த மூஸ் வாலா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கடந்த மே 29ஆம் தேதி பஞ்சாப் மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே என்ற இடத்தில் அவர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது குண்டு மழை பொழிந்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போதே உயிரிழந்தார்.

திரண்டனர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பெருந்திரளான ரசிகர்களும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் அங்குத் திரண்டனர். மூஸ்வாலா மரணம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூஸ் வாலா தந்தையைச் சந்தித்து ஆறுதல் கூறி இருந்தார். நாளைய தினம் ராகுல் காந்தியும் மூஸ் வாலா தந்தையைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கைது
பட்டப்பகலில் பாடகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்புத்தி உள்ளது. இதையடுத்து பஞ்சாப் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி கொலையாளிகள் பயன்படுத்திச் சென்ற வாகனத்தைச் சாலை ஓரத்தில் கண்டுபிடித்தனர். அந்த காரை வழங்கியதாக இரு நபர்களை ஃபதேஹாபாத்தில் வைத்து கைது செய்தனர். அதே கிராமத்தில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில், மூஸ் வாலா கொலை செய்யப்பட்ட நாளில் அந்தப் பகுதியைச் சுற்றி இருக்கும் அனைத்து சிசிடிவி காட்சிகளிலும் சந்தேகப்படும் நபர்களைச் சல்லடை போட்டுத் தேடி வருகிறது பஞ்சாப் போலீஸ்! அதன்படி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்ட நாளான மே 29ஆம் தேதி அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த இருவரும் சந்தேக நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

செல்பி
மேலும், சித்து மூஸ் வாலா வீட்டைச் சுற்றி இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சரியாக மூஸ் வாலா வெளியே வந்ததும், அவரை நோக்கி ஒரு இளைஞர் பரபரப்புடன் செல்கிறார். அவரிடம் போட்டோ எடுக்க வேண்டும் எனக் கூறி செல்ஃபி எடுத்துக் கொள்வதும் அதில் பதிவாகி உள்ளது. செல்ஃபி எடுத்த அந்த இளைஞர் தான், மூஸ் வாலா இருக்கும் இடம் குறித்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடும் பணிகளில் போலீசார் இப்போது இறங்கி உள்ளனர்.

ஆம் ஆத்மி அரசு
பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு விஐபி கலாசாரத்தை ஒழிக்கிறோம் என்று கூறி இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்ற மறுநாளே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாதுகாப்பு குறைப்பு குறித்து கேள்வி எழுப்பின. இதையடுத்து சில நாட்கள் இடைவெளியில் அனைத்து விஐபிக்களுக்கும் பாதுகாப்பு மீண்டும் போடப்பட்டது.












Click it and Unblock the Notifications