ரயிலில் வந்த 1,000 பஞ்சாப் விவசாயிகள்... டெல்லிக்குள் செல்லாமல் மும்பை நோக்கி சென்றதால் பரபரப்பு!
டெல்லி: டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயணித்த ரயில் புதுடெல்லிக்குள் நுழையாமல் மும்பை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 26-ந் தேதி நிகழ்ந்த சம்பவங்களைத் தொடர்ந்து சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன.
டெல்லியில் தொடர் போராட்டம்
இருப்பினும் டெல்லியில் இன்னமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களை தொடருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சாப் மெயில் ரயிலில் பயணித்தனர்.
பஞ்சாப் மெயிலில் பயணம்
இந்தியாவின் மிக பழமையான ரயில்களில் பஞ்சாப் மெயிலும் ஒன்று. பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் இருந்து டெல்லி வழியாக மும்பைக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உபி, மபி வழியாக மும்பையை இந்த ரயில் சென்றடையும்.
டெல்லிக்குள் செல்லவில்லை
இந்த ரயிலில்தான் 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயணம் செய்தனர். இந்த ரயில் இன்று காலை ஹரியானாவின் ரோக்டாக் ரயில் நிலையத்தை கடந்து புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஹரியானாவின் ரேவாரியில் இருந்து மாற்றுப் பாதையில் மும்பை நோக்கி பஞ்சாப் மெயில் ரயில் திரும்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யோகேந்திர யாதவ் புகார்
ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவரான யோகேந்திர யாதவ் இன்று காலை தமது ட்விட்டர் பக்கத்தில், ரோக்டாக்கில் இருந்து ரேவாரிக்கு 1,000 பஞ்சாப் விவசாயிகளுடன் ரயில் திருப்பிவிடப்பட்டதாகவும் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க விடாமல் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
வடக்கு ரயில்வே மறுப்பு
ஆனால் வடக்கு ரயில்வே நிர்வாகமோ, ரயிலை இயக்குவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் காரணமாகவே மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதாக விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.