பஞ்சாப் தேர்தல்: பாஜக உடன் அமரீந்தர் சிங் கூட்டணி.. ஆனா அவர் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. பின்னணி!
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் எஸ்ஏடி (சன்யுக்த்) கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், தேர்தல் அறிக்கை தொடர்பாக முக்கிய தகவலை பாஜக பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் - பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக தான் ஆளும் கட்சி!
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக இதுவரை ஒரு முக்கிய கட்சியாக இருந்ததில்லை. அதேநேரம் இந்த முறை அதை மாற்ற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

புதுக்கட்சி
அதனால் தான் இந்த முறை தேர்தலில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால், அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் அமரீந்தர் சிங்!

பாஜக உடன் கூட்டணி
அமரீந்தர் சிங் பாஜக உடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார் எனப் பல வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பஞ்சாபில் பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்முனை போட்டி
பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின் எஸ்ஏடி (சன்யுக்த்) ஆகியோருடன் இணைந்து இந்த தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. 3 கட்சிகளைக் கொண்ட இந்தக் கூட்டணிக்கு பாஜக தலைமை தாங்கும். இதன் மூலம் பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக - அமரீந்தர் சிங் கூட்டணி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பொதுவான தேர்தல் அறிக்கை
இது தொடர்பாக ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், "மூன்று கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும். சீட் பகிர்வு குறித்து இந்த குழு பாஜகவிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்படி முடிவெடுக்கப்படும். பஞ்சாப் தேர்தலுக்கு 3 கட்சிகளும் இணைந்து பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிடும். கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் சமயத்தில் அப்போதுள்ள நிலைமையை பொறுத்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications