பஞ்சாப்பில் பாஜகவிற்கு "முட்டை"! காங். பரிதாபம்.. ஆம் ஆத்மிக்கு 111: டுடேஸ் சாணக்யா எக்சிட் போல்
டெல்லி: பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே 100 இடங்களுக்கு மேல் வெல்லும் என டுடேஸ் சாணக்யா கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் என நான்கு முனை போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே சில மாதங்களே முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராகவும் ஆம் ஆத்மி சார்பில் பகவந்த் மானும் அறிவிக்கப்பட்டனர்.

கடும் போட்டி
இவர்களுக்கிடையே போட்டி கடுமையாக இருந்த நிலையில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்து பல செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன. இதில் டுடேஸ் சாணக்யா நடத்திய கருத்து கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி 100 அல்லது 111 இடங்களில் வெல்லும். அது போல் காங்கிரஸ் கட்சி 10 அல்லது 17 இடங்களிலு வெல்லும்.

அகாலி தளம்
அகாலி தளம் கட்சி 6 அல்லது 11 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி ஒரு இடத்தில் வெல்லும் அல்லது ஒரு இடத்திலும் வெல்லாமல் போகும் என கணித்துள்ளது. பெரும்பாலும் பஞ்சாபில் செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாகவே இத்தகைய மாற்றம் ஏற்பட்டதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமாக பாஜகவுக்கு அதிர்ச்சிகரமான முடிவை கொடுத்துள்ளதாகவே இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பார்க்கப்படுகின்றன. பஞ்சாப்பில் 59 அல்லது 60 இடங்களில் வென்றால் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்ற நிலையில் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

2017 ஆம் ஆண்டு என்ன நிலை
கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி வென்றது. அங்கு பாஜக - சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து காங்கிரஸ் சார்பாக அமரீந்தர் சிங் முதல்வராக தேர்வானார். அந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்று அபார வெற்றிபெற்றது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை வென்றது. பாஜக - சிரோன்மணி அகாலிதளம் 18 இடங்களை வென்றது. லோக் இன்சாப் கட்சி 2 இடங்களை வென்றது. அமரீந்தர் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி நியமிக்கப்பட்டார். கடந்த தேர்தலில் 3 ஆவது இடத்திற்கு வந்த ஆம் ஆத்மி இந்த முறை கருத்து கணிப்பில் ஆட்சியை பிடிக்கும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications